துபாய்: இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட ‘இன்ஃபினிட்டி பிரிட்ஜ்’.. போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன..??
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் கடந்த வாரம் இன்ஃபினிட்டி பிரிட்ஜை (infinity bridge) திறந்து வைத்தார்.
துபாயின் வியக்கவைக்கும் கட்டிடக்கலைக்கு மற்றொரு சான்றாக கட்டப்பட்டு, காண்போரை பிரமிக்க வைக்கும் இன்ஃபினிட்டி பிரிட்ஜ் (infinity bridge) இன்று ஜனவரி 16 முதல் முறையாக பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு திசையிலும் ஆறு பாதைகள் கொண்ட இந்த பாலம் முடிவிலி சின்னம் (infinity) போன்ற வடிவில் ஒரு வளைவைக் கொண்டுள்ளது. இந்த பாலம் பயன்பாட்டிற்காக திறக்கப்படுவதற்கு முன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இந்த பாலத்தை பார்வையிட்டு, போக்குவரத்துக்கான தயார்நிலையை உறுதி செய்தனர்.
சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இயக்குநர் ஜெனரலும், இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் முகமது அல் தாயர் மற்றும் துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மரி ஆகியோரும் இந்த பாலம் திறக்கப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்களை ஆய்வு செய்தனர்.
மேலும் அல் ஷிண்டகா சுரங்கப்பாதையுடன் இன்ஃபினிட்டி பாலத்திற்கும் புதிய பாலங்களுக்கும் இடையிலான இணைப்பை முடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலைக்காக அல் ஷிண்டகா சுரங்கப்பாதை இரு மாதங்களுக்கு இன்று முதல் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மூடப்படுவதால் போக்குவரத்தானது பொதுவாக தேராவில் இருந்து பர் துபாய் வரை மற்றும் பர் துபாயில் இருந்து தேரா வரை இன்ஃபினிட்டி பிரிட்ஜில் ஒவ்வொரு மணி நேரமும் 24,000 வாகனங்கள் இரு திசைகளிலும் செல்லும் வகையில் இருக்கும்.
போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:
தேரா ஐலேண்ட் முதல் பர் துபாய் வரை:
வாகனங்கள் கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலம் வழியாக பர் துபாய் மற்றும் ஜுமேராவை நோக்கி இன்ஃபினிட்டி பிரிட்ஜிற்கு நேரடியாகச் செல்லும்.
அபுபக்கர் அல் சித்திக் ஸ்ட்ரீட்:
வாகனங்கள் அல் கலீஜ் ஸ்ட்ரீட் ஜங்க்ஷன் வழியாக இடதுபுறம் திரும்பி, கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலம் வழியாக பர் துபாய் மற்றும் ஜுமேராவை நோக்கி இன்ஃபினிட்டி பிரிட்ஜிற்கு செல்லும்.
அல் மம்ஸார்
போக்குவரத்து அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் தொடர்ந்து, அபுபக்கர் அல் சித்திக் ஜங்க்ஷனைக் கடந்து, கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலம் வழியாகஇன்ஃபினிட்டி பிரிட்ஜ் வரை சென்று பின்னர் பர் துபாய் மற்றும் ஜுமேரா நோக்கி போக்குவரத்து தொடரும்.
உமர் பின் அல் கத்தாப் ஜங்க்ஷன்
போக்குவரத்து கார்னிச் ஸ்ட்ரீட் வழியாக இன்ஃபினிட்டி பிரிட்ஜ் வரை புதிய மேம்பாலம் நோக்கிப் பின்னர் பர் துபாய் மற்றும் ஜுமேரா நோக்கி தொடரும்.
அல் முசல்லா ஜங்க்ஷன்
இந்த ஜங்க்ஷனில் இருந்து போக்குவரத்து உமர் பின் அல் கத்தாப் ஜங்க்ஷனுக்கு சென்று, பின்னர் இடதுபுறம் இன்ஃபினிட்டி பிரிட்ஜை நோக்கிச் செல்லலாம் அல்லது அல் முசல்லா ஸ்ட்ரீட்டில் நேராகத் தொடர்ந்து, பின்னர் JN13 மேற்பரப்பிலிருந்து இன்பினிட்டி பிரிட்ஜ் நோக்கி கார்னிச் ஸ்ட்ரீட்டில் செல்லலாம்.
தேரா ஐலேண்ட் மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம்
போக்குவரத்து கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலத்தின் கீழ் மேற்பரப்பு சாலை வழியாக கார்னிச் ஸ்ட்ரீட் மற்றும் இன்ஃபினிட்டி பிரிட்ஜிற்கு செல்லும்.
இந்த திட்டமானது முதன்முதலில் 2018 இல் அறிவிக்கப்பட்டது. இந்த பாலம் 5.3 பில்லியன் திர்ஹம் செலவில் மேற்கொள்ளப்படும் அல் ஷிந்தகா காரிடார் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் 2030ல் பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து வெறும் 16 நிமிடங்களாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.