Covid-19: அமீரகத்தில் மூன்று டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு நான்காவது டோஸ் போட்டுக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்…!!
அமீரகத்தில் கொரோனாவிற்கான முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களது மூன்றாவது டோஸை போட்டுக்கொண்ட பின்னர் நான்காவதாக ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது சினோபார்ம் தடுப்பூசியைப் பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அபுதாபி பொது சுகாதார மையம் கூறியுள்ளது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், Al Hosn செயலியில் பசுமை நிலையைப் (green status) பேணுவதற்கும் தகுதியுடையவர்கள் தங்கள் தடுப்பூசி வரலாறு மற்றும் வயது அடிப்படையில் சினோபார்ம் அல்லது Pfizer-BioNTech இன் பூஸ்டர் டோஸைப் பெறலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நான்காவது டோஸுக்குத் தகுதியுடையவர்கள் தங்கள் Al Hosn அப்ளிகேஷனில் பசுமை நிலையை தக்கவைக்க அதை எடுக்க வேண்டுமா அல்லது மூன்றாவது டோஸ் போதுமானதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
இரண்டு அல்லது மூன்று டோஸ் சினோபார்ம் போட்டுக் கொண்டவர்கள், கடைசியாக தடுப்பூசி பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, சினோபார்ம் அல்லது ஃபைசரின் பூஸ்டர் டோஸைப் பெறலாம்.
சினோபார்ம் இரண்டு டோஸ்களைப் பெற்று ஃபைசர்-பயோஎன்டெக் பூஸ்டர் டோஸை பெற்றவர்கள், கடைசியாகப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு ஃபைசரின் பூஸ்டர் டோஸைப் பெறலாம்.
Pfizer-BioNTech இன் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற்ற பிறகு, ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஃபைசரின் பூஸ்டர் டோஸைப் பெறலாம்.
மருத்துவ ரீதியான அதிக ஆபத்துள்ளவர்கள மூன்றாவது டோஸ் போட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெறலாம்.
தற்போதைய நிலவரப்படி, இரண்டு டோஸ் சினோபார்ம் மற்றும் இரண்டு டோஸ் ஃபைசரைப் போட்டுக்கொண்டவர்களுக்கு ஐந்தாவது டோஸ் இல்லை என்றும் அபுதாபி பொது சுகாதார மையம் கூறியுள்ளது. மேலும் கொரோனாவிற்கான இந்த இலவச பூஸ்டர் டோஸ்கள் நியமிக்கப்பட்ட மையங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.