தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்!! பயணிகளுக்கு சவூதி விமான நிலையம் அறிவுறுத்தல்….!!
சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அசிஸ் சர்வதேச விமான நிலையம், பயணிகள் தங்கள் பயண நடைமுறைகளை எளிதாக்குவதற்கு அங்கீகரிக்கப்படாத பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விமான நிலையம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கப்படத்தினை பகிர்ந்துள்ளது.
அதன்படி, விமான நிலையத்தில் துணியால் சுற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கயிறுகளால் கட்டப்பட்ட பைகள் போன்ற ஒழுங்கற்ற சாமான்கள் அனுமதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத சாமான்களில் நீண்ட பட்டைகள் கொண்ட பைகள், துணி கேரியர்கள் மற்றும் ஒழுங்கற்ற எடையுள்ள பொருட்கள் ஆகியவை அடங்கும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனவே, விமான நிலையத்தில் பயண நடைமுறைகளை சீரமைக்க, பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எடை அளவைப் பூர்த்தி செய்து, விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் இ-போர்டிங் பாஸ்களைப் பெற்றுக்கொள்வதுடன் பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு, உள்நாட்டு விமானங்களுக்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்கூட்டியே மற்றும் சர்வதேச விமானங்களுக்கு மூன்று மணிநேரத்திற்கு முன்கூட்டியே வருமாறு விமான நிலைய நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
Dear passenger
Get to know the Banned baggage to
ease your travel procedures
#KingAbdulazizAirport #ItsAnHonorToServeYou pic.twitter.com/JcgIbmq7uB— مطار الملك عبدالعزيز الدولي (@KAIAirport) April 22, 2023
சவுதி அரேபியாவின் மிக முக்கியமான விமான நிலையமான கிங் அப்துல் அசிஸ் சர்வதேச விமான நிலையம் ஏப்ரல் 1981 இல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது, இது ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் மக்காவில் உள்ள பெரிய மசூதியை அடைவதற்கான நுழைவாயிலாக உள்ளது.
குறிப்பாக, இங்கு உலகின் நான்காவது பெரிய பயணிகள் முனையமான (terminal) யாத்ரீகர்கள் ஹால் உள்ளது. சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த விமான நிலையம் உலகளவில் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.