ரமலான் 2022: இஃப்தார் கூடாரங்களுக்கான விதிமுறைகளை வெளியிட்ட அபுதாபி…!!
கொரோனா தொற்றால் கடந்த இரு ஆண்டுகளாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இஃப்தார் கூடாரங்களுக்கு இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இஃப்தார் கூடாரங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ரமலான் மாதத்தில் இஃப்தார் கூடாரங்களை அமைப்பதற்கு பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு விதிகளை அபுதாபி அறிவித்துள்ளது.
வியாழன் அன்று, அபுதாபியின் கொரோனா தொற்றுநோய்க்கான அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் குழு கூடாரங்களை அமைப்பதற்கு அனுமதிகள் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலில் அபுதாபி நிலையான சரிவைக் கண்டதால், தொற்றுநோய் தொடர்பான பெரும்பாலான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தளர்த்தியுள்ளனர். அத்துடன் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அனைத்து சமூக உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கும், மத மற்றும் சமூக நடவடிக்கைகளை உள்ளடக்கிய ரமலான் மாதத்திற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அவசரகால சமூக உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதனபடி அபுதாபியில் ரமலான் மாதத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மத நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள்:
– அனுமதிக்கப்பட்ட அரசு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ரமலான் கூடாரங்களை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன
– சமூக விலகல், முக கவசம் அணிதல் மற்றும் மசூதியில் தங்களுக்கென தனிப்பட்ட தொழுகை விரிப்புகளை கொண்டு வர வேண்டும்
– ரமலான் உணவுகளை விநியோகிக்கும் போது பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்
– நன்கொடைகள் மற்றும் பரிசுகளுக்கு மின்னணு கட்டண முறைகளைப் பயன்படுத்தவும்
– கொரோனா நோயாளிகள் நோன்பு வைப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்
சமூக நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள்:
– முடிந்தவரை வாழ்த்துக்களை அனுப்ப நேர் செல்வதை தவிர்த்து டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தவும்
– பொது மற்றும் குடும்ப நிகழ்வுகளில் எளிதில் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பவர்களைக் கூடுதலாகக் கவனியுங்கள்
– குழு இஃப்தார் மற்றும் சுஹூர் கூட்டங்கள் ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது
– சந்தைகளுக்குச் செல்லும்போது கொரோனா முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.