இந்தியா, அமீரகம் இடையேயான பயணம் குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளை முன்பதிவு செய்வது மற்றும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விசிட் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் டிக்கெட் செல்லுபடியாகும் தன்மை ஆகியவை குறித்த சமீபத்திய பயண வழிமுறைகளை அனைத்து பயண முகவர்களுக்கும் வெளியிட்டுள்ளது.
புதிய வழிமுறைகளின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் விமான நிலையம் செல்வதற்கு முன்பாகவே புறப்படுவதற்கு முன் உண்டான பயண நடைமுறைகளை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா செல்லும் அனைத்து பயணிகளும் newdelhiairport வலைதளத்தில் இருக்கும் Air Suvidha போர்ட்டலில் தங்களது விபரங்களை பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுகாதார குடும்ப நல அமைச்சகம் கூறியுள்ளதன்படி, அனைத்து பயணிகளும் சுய அறிவிப்பு படிவத்தை பயணம் மேற்கொள்வதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பாக ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது தகுந்த ஹெல்த் கவுண்டர்களில் விமான நிலையம் வந்திறங்கியவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும், பதிவுக்கு முந்தைய ஆவணங்களில் சுகாதார அறிவிப்பு படிவங்கள் மற்றும் பயணிகள் பரிந்துரைக்கும் பயணத்தின் பிற முறைகளும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வழிமுறைகளானது பயணிகள் வெளிநாட்டிற்கு புறப்படுவதற்கோ அல்லது இந்தியா வருவதற்கோ முன்னதாக செக்-இன் கவுண்டர்களில் அதிகளவிலான கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த செயல்முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு முன்கூட்டியே தாங்கள் சென்றடைய இருக்கும் மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பயணம் தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விசிட் அல்லது சுற்றுலா விசாவில் துபாய்க்கு பயணிக்க விரும்பும் இந்திய குடிமக்கள் அல்லது விசா பெற விரும்பும் நபர்கள் செல்லுபடியாகும் ரிட்டர்ன் டிக்கெட்டை வைத்திருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.