அமீரக செய்திகள்

துபாய் தீபாவளி கொண்டாட்டம்: கண்ணைக் கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி..!! 50 கிராம் தங்கம், அபார்ட்மெண்ட் வெல்லும் வாய்ப்பு..!!

தீபாவளி வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு துபாயில் 10 நாட்களுக்கு கோலாகலமாக சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இதில் பல்வேறு கலைநிகழ்ச்நிகள், போட்டிகள், பரிசு என இடம்பெறவுள்ளன. கொரோனாவிற்குப் பிறகு, துபாயில் வசிப்பவர்கள் பல்வேறு அரசு மற்றும் கார்ப்பரேட் அமைப்புகளின் பங்கேற்புடன் தீபாவளியை மிகப் பெரிய அளவில் கொண்டாடவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்கள் நீடிக்கும் இந்த விழாக்களில் நேரடி கலாச்சார நிகழ்ச்சிகள், வானவேடிக்கை காட்சிகள், ஒரு வருட காலத்திற்கு வாடகையில்லா அபார்ட்மெண்ட்டை வெல்லும் வாய்ப்பு மற்றும் 10 அதிர்ஷ்டசாலிகள் 50 கிராம் தங்கம் வெல்லும் ரேஃபிள் டிராக்கள் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த மெகா கொண்டாட்டத்தின் விவரங்களை இந்திய தூதரகம் மற்றும் துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அல் சீஃப் ஹெரிடேஜ் பகுதியில் வெளியிட்டுள்ளனர்.

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவன (DFRE) சில்லறைப் பதிவு இயக்குநர் முகமது ஃபெராஸ் கூறுகையில்: “எங்கள் நகரத்தின் பன்முகத்தன்மையைக் குறிக்கும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களுக்காக இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். துபாயில் இந்த ஆண்டு தீபாவளியின் போது அற்புதமான சலுகைகள், ரேஃபிள் டிராக்கள், கண்கவர் நேரடி பொழுதுபோக்கு, வானவேடிக்கைகள் மற்றும் பல கண்கவர் நிகழ்வுகள் அக்டோபர் 28 வரை நுபாய் எமிரேட் முழுவதும் நடைபெறும்” என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “ஃபெஸ்டிவல் பிளாசா, சிட்டி சென்டர் தேரா, புர்ஜூமான் மால், ஒயாசிஸ் மால் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி உள்ளிட்ட பல்வேறு ஷாப்பிங் மால்கள் மற்றும் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சிட்டி சென்டர்களில், அக்டோபர் 14 முதல் நிகழ்ச்சிகள், வொர்க்‌ஷாப் மற்றும் ரங்கோலி போட்டிகள் நடைபெறும். 300 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். புர் ஜுமானில், நேரடி பொழுதுபோக்கு, பஜார், பேஷன் ஷோக்கள் மற்றும் பல நடைபறவுள்ளன” என தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, ஒரு வருட காலத்திற்கு வாடகை இல்லாத ஒரு BHK அபார்ட்மெண்ட்டை வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து கூறுகையில், “வானவேடிக்கைகளைப் பொறுத்தவரை, ஃபெஸ்டிவல் சிட்டியில் water and light imagine show நடைபெற உள்ளது. அக்டோபர் 23 அன்று இரவு 8.30 மணிக்கு துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் கண்கவர் வான வேடிக்கை நிகழ்வுடன் இது ஒத்திசைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நீங்கள் 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழித்தால், 50 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியை வெல்லும் 10 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக இருக்கும் வாய்ப்பைப் பெறலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாது துபாயின் குளோபல் வில்லேஜிலும் தீபாவளியைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி மார்க்கெட்டுகளில் பார்வையாளர்கள் தனித்துவமான கைவினைப் பொருட்கள், வெள்ளிப் பொருட்கள், தீபாவளிக்கு ஏற்ற அலங்காரப் பொருட்கள் மற்றும் வண்ணமயமான இந்திய ஆடைகள் மற்றும் பல இந்திய சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை வாங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!