துபாயில் 766 மசூதிகளுக்கு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்த அனுமதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பையொட்டி மூடப்பட்டிருந்த மசூதிகள் கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும் இதுவரையிலும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை முதல் மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்தலாம் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் (NCEMA) சமீபத்தில் அறிவித்தது.
அந்த அறிவிப்பினை தொடர்ந்து, துபாயில் வரும் வெள்ளிக்கிழமை அன்று 760 க்கும் மேற்பட்ட மசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தவுள்ளதாக அதிகாரிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளனர்.
“துபாயில் 766 மசூதிகளுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் குத்பாவிற்கான இடைநிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக, மசூதிகளில் 30 சதவீத எண்ணிக்கையில் மட்டுமே வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அதிகளவில் வழிபாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் கலந்து கொள்வதற்காக கூடுதலாக தற்காலிகமாக 60 மசூதிகள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹமத் அல் ஷேக் அஹ்மத் அல் ஷைபானி அவர்கள் கூறியுள்ளார்.
துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை குழுவின் ஒருங்கிணைப்புடன், வழிபாட்டாளர்கள் மசூதிகளுக்குள் நுழைதல் மற்றும் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஒவ்வொரு மசூதியிலும் உள்ள தன்னார்வலர்களுடன் IACAD ஒருங்கிணைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மசூதிகளின் உள் பகுதிகள் முழுவதையும் வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்தால், மற்ற வழிபாட்டாளர்கள் வெளிப்புற பகுதிகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுதல் போன்ற செயல்பாடுகளை இவர்கள் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கான விதிகள்
- மீண்டும் வெள்ளிக்கிழமை தொழுகை மசூதிகளில் நடத்தப்படும் போது 30 சதவீதத் திறனில் மட்டுமே தொழுகை நடத்தப்பட வேண்டும்
- வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் குத்பா 10 நிமிடங்களுக்கு மேல் இருக்காது.
- வழிபாட்டாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும்
- வழிபாட்டாளர்கள் அனைவரும் தங்களின் சொந்த தொழுகை விரிப்புகளை (முஸல்லா) கொண்டு வர வேண்டும். மேலும், அவற்றை மசூதியில் விட்டுச்செல்லவோ அல்லது வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ கூடாது.
- உணவு மற்றும் நீர் ஆகியவற்றை விநியோகிக்கவும் கூடாது.