சவூதிக்குப் பயணிப்பவர்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட விமானப் போக்குவரத்து ஆணையம்..!!
கொரோனா பாதிப்பின் காரணமாக சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து தடையானது பகுதியளவு தளர்த்தப்பட்டு தற்பொழுது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.
மீண்டும் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளின் மூலம் மற்ற நாடுகளில் இருந்து சவூதிக்கு பயணிப்பவர்கள் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையம் (GACA) புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தற்பொழுது விமானங்களை இயக்க அந்நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் தயாராக உள்ளன என்று விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) தெரிவித்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) கூறியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சவூதி அரேபியாவிற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து சவூதியை வந்தடைந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க அந்நாட்டிற்குள் நுழைந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு மற்றொரு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்ப பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விமான நிறுவனமும் பயணிகளுக்கு தங்களின் பயண விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா : மீண்டும் துவங்கவிருக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள்..!!