அபுதாபி: இனி டிரைவர் இல்லாமல் செயல்படும் தானியங்கி டாக்ஸியில் குடியிருப்பாளர்கள் பயணிக்கலாம்… முன்பதிவு செய்வது எப்படி…??
அபுதாபியில் வசிப்பவர்கள் இப்போது டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் டாக்ஸியில் (self driving taxi) பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அபுதாபியின் யாஸ் ஐலாண்டில் (yas island) இந்த டிரைவர் இல்லாத டாக்ஸியை பயணிகள் முன்பதிவு செய்யும் வசதி துவங்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி வாகன சேவையின் வெற்றிகரமான சோதனைக் கட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அமீரக செய்தி நிறுவனம் WAM தெரிவித்துள்ளது.
இதில் பயணிக்க விரும்பும் நபர்கள் ஆப்பிள் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளேயில் கிடைக்கும் Txai என்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் இந்த தானியங்கி டாக்ஸி சேவையை முன்பதிவு செய்யலாம்.
வாகன சோதனையின் போது டாக்சிகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டராக அமைக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் பயணிக்கும் போது டாக்ஸிகள் பொதுவாக 65 கிமீ வேகத்திற்கு மேல் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாகனத்தில் ஓட்டுனர் இருக்கையில் அமரும் பாதுகாப்பு அதிகாரி, பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த சேவையை வழங்கும் Bayanat-ன் தலைமை நிர்வாகி ஹசன் அல் ஹொசானி கூறுகையில், அப்ளிகேஷனைப் பதிவிறக்கியவுடன் குடியிருப்பாளர்கள் ஸ்கிரீனில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். பயணிகள் யாஸ் ஐலேண்டில் உள்ள ஒன்பது இடங்களில் ஏதேனும் ஒன்றில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அபுதாபியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில்இந்த சேவையை செயல்படுத்தி பயணிகளின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வகை கார்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. சேவையைப் பற்றிய கூடுதல் விவரங்களை அப்ளிகேஷனில் தெரிந்து கொள்ளலாம்.