துபாய் போலீஸின் சூப்பர் கார்களை மிக அருகில் பார்க்க ஒரு அருமையான வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
துபாயில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேசிய அளவிலான கொண்டாட்டங்களின் போது, அடிக்கடி காணப்படும் துபாய் காவல்துறையின் பிரமிக்க வைக்கும் வெள்ளை மற்றும் பச்சை நிற சூப்பர் கார்களை, மிக அருகில் சென்று பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
துபாய் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், “வேடிக்கை நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாகமான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு கொண்டாட்டத்திற்கு பொதுமக்களை அழைக்கிறோம், அங்கு காவல்துறையின் சூப்பர் கார் காட்சிக்கு வைக்கப்படும். துபாய் சுற்றுலா போலீஸீன் சார்பாக நடத்தப்படும் இந்த கொண்டாட்டம் செப்டம்பர் 24, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ஜுமேராவில் உள்ள கைட் பீச்சில் (kite beach) நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் சுற்றுலா காவல்துறையின் கூற்றுப்படி, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு நடவடிக்கைகள், கடல்சார் நிகழ்ச்சிகள், இசைக்கச்சேரி மற்றும் துபாய் காவல்துறையின் சூப்பர் கார்களை மிக அருகில் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்டங்களில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் துபாய் காவல்துறையில் உள்ள பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), மெக்லேரன் (McLaren MP4-12C), அஸ்டான் மார்ட்டின் (Aston Martin One-77), மெர்சிடிஸ் (Mercedes-AMG GT63 S), மஸராட்டி கிரண் டூரிஸ்மோ (Maserati GranTurismo), புகாட்டி வெய்ரோன் (Bugatti Veyron), டொயோட்டா (Toyota 2021 GR), சுப்ரா (Supra) மற்றும் இது போன்ற பல சூப்பர் கார்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறுகையில்: “மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான செயல்கள் நிறைந்த ஒரு நாளுக்கு உங்கள் குடும்பத்தினருடன் வாருங்கள்” என்றும், “துபாய் முழுவதும் உங்களின் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
துபாய் சுற்றுலாக் காவல் துறையானது, சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளைக் கையாள்வதில் குறிப்பாக, பொதுமக்கள் காவல்துறையை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி அவசரகாலத்தில் 999 மற்றும் அவசரமற்ற சூழ்நிலைகளில் 901 ஐ அழைப்பதன் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை துபாய் சுற்றுலா காவல்துறையின் ஈமெயிலான [email protected] வழியாக மின்னஞ்சல் செய்யலாம் என்றும், அல்லது துபாய் போலீஸ் ஸ்மார்ட் ஆப் மூலமாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.