வேலை செய்து கொண்டிருந்த நபரின் மேல் திடீரென விழுந்த கார் லிஃப்ட்.. சவுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
சவுதி அரேபியாவில் கார்கழுவும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் மீது கார் லிஃப்ட் விழுந்ததால், அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு சவூதி அரேபியாவில் அல் ஜூஃப் (Al Jouf) மாகாணத்தில் அமைந்துள்ள ஒர்க் ஷாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் மீது இயந்திரம் விழுந்ததும் அவர் மயக்கமடைந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் இருந்த சக ஊழியர்கள் அந்த தொழிலாளரைக் காப்பாற்ற அங்குமிங்கும் ஓடுவதையும், இயந்திரம் மீண்டும் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தின் மத்தியில் இயந்திரத்தை அதன் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிப்பதையும் வீடியோ காட்டுகிறது.
سقوط رافعة على عامل مغسلة سيارات بــ #الجوف #معكم_باللحظةhttps://t.co/8Z6mNPoqYi pic.twitter.com/lJQDqrsbUH
— أخبار 24 (@Akhbaar24) October 4, 2023
மேலும், பாதிக்கப்பட்ட நபர் பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயது தொழிலாளி என்றும், முதுகுத் தண்டில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த தொழிலாளர் முதலில் அல் ஜூஃப் மாகாணத்தின் தலைநகரான டூமத் அல் ஜந்தலில் (Doumat Al Jandal) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் ரியாத்தில் உள்ள மருத்துவ நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இயந்திரம் விழுந்தது தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனிதப் பிழையா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. சுமார் 32.2 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட சவூதி அரேபியா, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஒரு பெரிய தாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.