அபுதாபியிலிருந்து துபாய் செல்லும் முக்கிய சாலை நான்கு நாட்களுக்கு பகுதியளவு மூடல்!! வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பை வெளியிட்ட ITC..!!
அபுதாபியிலிருந்து துபாய் செல்லக்கூடிய முக்கிய சாலையான ஷேக் சையத் பின் சுல்தான் சாலையில் (E10) சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், நான்கு நாட்களுக்கு பகுதி நேர மூடலை அபுதாபி முனிசிபாலிட்டியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre-ITC) அறிவித்துள்ளது.
இது குறித்து ITC வெளியிட்டுள்ள பதிவின்படி, ஜூலை 20 ம் தேதி வியாழன் முதல் ஜூலை 24 ம் தேதி திங்கள் வரை இந்த பகுதி நேர சாலை மூடல் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விளக்கப்படத்தையும் ITC தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலே உள்ள வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, அபுதாபியில் இருந்து துபாய் நோக்கி செல்லும் சாலையில் அல் ஷஹாமா பகுதியில் சாலையின் இரண்டு வலது பாதைகள் ஜூலை 20 ஆம் தேதி இரவு 11:00 மணி முதல் ஜூலை 21 ஆம் தேதி இரவு 10:00 மணி வரை மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதுபோல, துபாய் நோக்கி செல்லும் இந்த சாலையின் மூன்று வலது பாதைகள் ஜூலை 21ஆம் தேதி இரவு 10:00 மணி முதல் ஜூலை 24ஆம் தேதி அன்று காலை 6:00 மணி வரை மூடப்படும் என்றும் அபுதாபியின் ஒருங்கினைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, எச்சரிக்கையுடன் வாகனங்களில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலவச பார்க்கிங்:
அபுதாபியில் இஸ்லாமியப் புத்தாண்டை முன்னிட்டு ஜூலை 21 அன்று பார்க்கிங் கட்டணம் மற்றும் டோல்கேட் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என்று அபுதாபியின் ITC அறிவித்துள்ளது.
அதன்படி,வெள்ளிக்கிழமை டார்ப் டோல் கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது மற்றும் MAWAQiF பார்க்கிங்கை ஜூலை 21 ஆம் தேதி இலவசமாக பயண்படுத்திக்கொள்ளலாம்.
எனவே, ITC அறிவித்துள்ள குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளில் மட்டுமே இலவச பார்க்கிங்கை அணுகவும், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் (Resident Parking) பார்க்கிங் செய்வதைத் தவிர்க்கவும் ITC வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளது.