ஒரே ஆண்டில் 80,000 பேருக்கு கோல்டன் விசாக்களை வழங்கிய துபாய்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், திறமையான மாணவர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 10 ஆண்டிற்கான கோல்டன் விசா கடந்த 2019 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மட்டுமே சுமார் 80,000 கோல்டன் விசாக்கள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, இந்த விகிதம் முந்தைய ஆண்டை விட 69 சதவீதம் அதிகம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியில் தினசரி 40 கோல்டன் விசாக்கள் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும், கோல்டன் விசா பெறுவதற்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை 50,000 திர்ஹம்ஸில் இருந்து 30,000 திர்ஹமாக குறைக்கப்பட்ட பின்னர் திறமையானவர்களுக்கான கோல்டன் விசாக்களுக்கான தேவை அதிவேகமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, துபாயில் கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து ஏறத்தாழ 44,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் நீண்டகால விசாக்களைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. துபாயில் 2019 மற்றும் 2022 க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 151,600 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.