UAE: 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட ஒப்புதல் அளித்த அமீரக அரசு..!! சமூக உறுப்பினர்கள் பாதுகாப்பே முக்கியம்..!!
அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களில் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் 19 தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த முடிவானது தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு இணங்க அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் முடிவுகள், அவசரகால பயன்பாட்டு அனுமதிக்கு பின்பற்றப்பட்ட கடுமையான மதிப்பீடு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வழங்கப்பட்ட உள்ளூர் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் செயலாற்றும் அணுகுமுறைக்கு இணங்க, COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதையும், அனைத்து வயதினரைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சிகளுக்கு இந்த நடவடிக்கை மேலும் துணைபுரியும் எனவும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம், அபுதாபி சுகாதாரத் துறை, அபுதாபி பொது சுகாதார மையம் மற்றும் துபாய் சுகாதார ஆணையம் ஆகியவை கோவிட் -19 ன் பரவலை கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் பிரச்சாரத்தை நாடு முழுவதும் கடந்த ஆண்டே தொடங்கியிருந்தது. பின்னர் இந்த வயது வரம்பானது குறைக்கப்பட்டு 16 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இலவச தடுப்பூசி பிரச்சாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலும், நாடு முழுவதும் 11 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான மக்களில் பாதி பேருக்கு 2021 ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட அரசின் இலக்கை நிறைவேற்றியிருப்பதும் கவனிக்கத்தக்கது.