அமீரகத்தில் வீசத்தொடங்கிய இரண்டாவது அலை.. இன்று பிற்பகலுக்கு பின் மீண்டும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!!
அமீரகத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த கனமழை சற்று குறைந்திருக்கும் நிலையில், கனமழை, இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையுடன் எதிர்பார்க்கப்படும் நிலையற்ற வானிலையின் இரண்டாவது அலை இன்று மதியம் தொடங்கி நாடு முழுவதும் பரவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாலை முதல் இன்று செவ்வாய்கிழமை மதியம் வரை நாடு முழுவதும் நிலவிய நிலையற்ற வானிலையின் முதல் அலைக்குப் பிறகு, தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தனது சமீபத்திய வானிலை அறிவிப்பின் மூலம் இந்த செய்தியை பகிர்ந்துள்ளது.
மேலும், இந்த முதல் அலையின் போது நாட்டின் ஏழு எமிரேட்களிலும் பெய்த கனமழையால், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அத்துடன், இந்த கனமழையானது அமீரக குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையையும் பெரிதும் பாதித்துள்ளது. அதிக கனமழை காரணமாக துபாய் மெட்ரோ நிலையத்தில் மழைநீர் புகுந்ததில் மெட்ரோ சேவையும் தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் பெய்த கனமழை.. மழைநீர் புகுந்ததால் குளமாக மாறிய மெட்ரோ நிலையம்.. சேவை பாதிப்பு..!!
இது தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளும் பெரிதும் சேதமடைந்துள்ளன. அதே போன்று குடியிருப்பு கட்டிடங்களிலும் அதிவேகத்துடன் வீசிய காற்றின் காரணமாக மழைநீர் புகுந்ததால் வீட்டிலிருந்த குடியிருப்பாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகலுக்குப் பிறகு தொடங்கும் நிலையற்ற வானிலையின் இரண்டாவது அலையில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த இரண்டாவது அலை வெப்பச்சலன மேகப் பரப்பில் அதிகரிப்பைக் காணும் எனவும், இது மழையின் பல்வேறு தீவிரங்களுக்கு வழிவகுக்கும் எனவும் தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
NCM அதன் வானிலை செய்திக்குறிப்பில், இரண்டாவது அலை மேற்குப் பகுதிகளில் இருந்து தொடங்குகிறது, அங்கு வெப்பச்சலன மேகங்களின் அளவு அதிகரித்து வருகிறது, இது பல்வேறு தீவிரங்களின் மழையுடன் தொடர்புடையது, இதனால் மின்னல் மற்றும் இடியுடன் சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்யவும் வாயப்புள்ளது என தெரிவித்துள்ளது.
அத்துடன், புதன்கிழமை காலை முதல் புதன்கிழமை பிற்பகல் வரை, கடலோரப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்பதால் மழை பெய்யக்கூடும். அதன் பிறகு இந்த மேகங்கள் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி தங்கள் நகர்ந்து, புதன்கிழமை நண்பகலில் படிப்படியாக சிதறிவிடும் என்றும் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.