நடுத்தர மக்களின் நலனுக்காக VAT-க்கு பதிலாக கலால் வரிக்கு மாறும் குவைத் அரசு.. இனி ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டுமே VAT வரி..!!
குவைத் நாடானது VAT எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை அமல் படுத்துவதற்கான (VAT) விண்ணப்பங்கள் பாராளுமன்றங்களில் நிராகரிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வரி வசூலிப்பதற்கான முதல் தேர்வாக VATக்கு பதிலாக கலால் வரியை விதிக்க திட்டம் இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் புகையிலை மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பொருட்கள், குளிர்பானங்கள், இனிப்பு பானங்கள், கடிகாரங்கள், நகைகள், விலையுயர்ந்த கற்கள், சொகுசு கார்கள் மற்றும் படகுகள் போன்ற ஆடம்பரப் பொருள்கள் கலால் வரிக்கு உட்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த பொருட்களின் மீது முன்மொழியப்பட்ட வரி 10 முதல் 25 சதவீதம் வரை இருக்கும் எனவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடனான ஒப்பந்தத்தின்படி VAT ஐப் பயன்படுத்த அரசாங்கம் விரும்பினாலும், பாராளுமன்ற நிராகரிப்பின் காரணமாக தேசிய சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் பல நாடுகள் தற்போது பண வீக்கத்தினை சந்தித்து வருவதால், VAT வசூலிப்பதை தவிர்த்து கலால் வரியை வசூலித்தால் மாநிலத்தின் கருவூலம் ஆண்டுதோறும் KD 500 மில்லியன் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலால் வரியானது, ஆடம்பர பொருள்களின் மீது மட்டுமே சுமத்தப்படுவதால், நடுத்தர மக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் அரசு கருத்தில் கொண்டுள்ளது.
மேலும், புகைபிடித்தல், குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்றவற்றின் விளைவாக இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்கள் மக்களை ஆட்கொள்ளும் பட்சத்தில் இந்த நோய்களுக்கான திட்டங்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு அரசாங்கம் நிறைய பணம் செலவழிக்கும் நிலையில், வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போலவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கும் மட்டும் VAT வரியானது விதிக்கப்படும் என்று குவைத் அரசு தெரிவித்துள்ளது.
எனவே, நவம்பர் 2016 இல் குவைத் கையெழுத்திட்ட வளைகுடா ஒப்பந்தத்தின்படி, எல்லா வகையான புகையிலை பொருட்கள் மற்றும் ஆற்றல் பானங்களுக்கு 100 சதவீதமும், குளிர்பானங்களுக்கு 50 சதவீதமும் கலால் வரி விதிக்கப்படும், அதே நேரத்தில் 5 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட வரியும் (VAT) சேர்ந்து விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த, ஐந்து சதவீதம் வரியானது தேசிய கருவூலத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.