UAE: துபாயில் பூட்டிய வாகனங்களில் இருந்து 36 குழந்தைகள் மீட்பு.. பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பூட்டிய வாகனங்களில் இருந்து 36 குழந்தைகளை துபாய் காவல்துறை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வெப்பமான காலநிலையில், நிறுத்தப்பட்ட வாகனங்களில் வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்பதால் குழந்தைகளை தனியாக வாகனத்தில் விட்டுச்செல்ல வேண்டாம் என்று போலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையை காரில் கவனிக்காமல் விட்டுச் செல்லும் பாதுகாவலருக்கு 5,000 திர்ஹம்களுக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கவும் வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நீங்கள் வெளியே செல்லும்போது, உங்கள் காரைப் பூட்டுவதற்கு முன்பு அதைச் சரிபார்ப்பதை உறுதிசெய்ய வேண்டும். காரில் இருந்து வெளியே செல்லும்போது ஒரு நிமிடம் கூட குழந்தைகளை கவனிக்காமல் பெற்றோர்கள் விட்டுவிடக்கூடாது. குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு பாதுகாவலர்களே பொறுப்பு என்று போலிஸார் வலியுறுத்தினர்.
இந்த அலட்சியச் செயல் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களில் குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்கள் அலட்சியமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர்.