UAE: அபுதாபிக்குள் நுழைய மீண்டும் புதிய கட்டுப்பாடு..!! டிசம்பர் 19 முதல் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட மற்ற பிற எமிரேட்டுகளிலிருந்து குடியிருப்பாளர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கான நடைமுறையை அபுதாபியில் உள்ள அதிகாரிகள் புதுப்பித்து புதிய கட்டுப்பாடை அறிவித்துள்ளனர்.
ஒரு ஆண்டிற்கும் மேலாக நீடித்து வந்த நுழைவு கட்டுப்பாடு சில மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் 19 ம் தேதி முதல் அபுதாபிக்குள் நுழையும் என்ட்ரி பகுதிகளில் மக்களை ஸ்கேன் செய்ய EDE ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியை சேர்ந்த அதிகாரிகள் அறிவித்துள்ள இந்த புதிய நடைமுறைக்கு பயன்படுத்தவுள்ள EDE ஸ்கேனர்கள், ஸ்கேன் செய்யப்படும் நபரின் தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காமல், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சாத்தியமான கோவிட்-19 வைரஸ் தொற்றுநோய் பாதிப்புகளை விரைவாகக் கண்டறிய பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அபுதாபியின் அரசாங்க ஊடக அலுவலகம் இன்று புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “சாத்தியமான நேர்மறை கோவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்படும் நபரை ஆன்-சைட் சோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்படும், அங்கு அவர்களுக்கு இலவச ஆன்டிஜென் சோதனை வழங்கப்படும், மேலும் இந்த சோதனை முடிவுகள் 20 நிமிடங்களில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் “அபுதாபியில் மேற்கொள்ளப்படும் மொத்தப் பரிசோதனைகளில் நேர்மறை முடிவுகளை பெறுபவர்களின் எண்ணிக்கை 0.05 சதவிகிதம் என்ற குறைந்த கோவிட்-19 தொற்று விகிதத்தை பராமரிக்க உதவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு பலப்படுத்துகிறது” என்றும் ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
“தொடர்ச்சியான சோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல், பொது இடங்கள் மற்றும் நிகழ்வுகளை அணுக கிரீன் பாஸ் முறையைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக தடுப்பூசி விகிதங்கள் உள்ளிட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் அபுதாபியின் குறைந்த தொற்று விகிதம் வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது” என்றும் அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.