உலகளவில் தொடர்ந்து பிஸியான விமான நிலையமாக பெயரெடுக்கும் DXB..!! 3 மாதங்களில் 13.6 மில்லியன் பயணிகள் போக்குவரத்து பதிவு..!!
துபாய் சர்வதேச விமான நிலையம் 2022 ம் ஆண்டின் முதல் காலாண்டில் துபாய் விமான நிலையம் வழியாக 13.6 மில்லியன் பயணிகள் போக்குவரத்தை பதிவு செய்ததைத் தொடர்ந்து, 2020 ம் ஆண்டு முதல் தொடர்ந்து மிகவும் பரபரப்பான காலாண்டினை கொண்ட விமான நிலையமாக துபாய் விமான நிலையம் பெயரெடுத்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள், தொடர்ந்து இரண்டாவது முறையாக காலாண்டில் பயணிகள் போக்குவரத்து 10 மில்லியனைத் தாண்டியதால், விமான நிலையங்களில் கொரோனா பரவலுக்குப் பின் போக்குவரத்து மீட்பு வேகம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகிறது.
விமான நிலையங்களின் பயணிகளின் எண்ணிக்கை 2022 இன் முதல் காலாண்டில் 13.6 மில்லியனாக உயர்ந்ததனை பார்க்கையில் 2021 இன் இறுதி காலாண்டில் 11.8 மில்லியன் பயணிகளுடன் ஒப்பிடுகையில் 15.7 சதவீதம் அதிகமாகும். மேலும் ஒப்பிடுகையில், துபாய் விமான நிலையம் 2021 முதல் காலாண்டில் 5.7 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்தது கவனிக்கத்தக்கது.
மேலும் மார்ச் 2022 இல் மட்டும் 5.5 மில்லியன் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையங்களின் CEO, பால் கிரிஃப்த்ஸின் கூற்றுப்படி, தற்பொழுது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வருடாந்திர போக்குவரத்து 58.3 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்றுநோய்க்கு முந்தைய, 2019 இல் விமான நிலையத்தால் ஆண்டுக்கு 86.4 மில்லியன் பயணிகள் போக்குவரத்து பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை துபாய் விமான நிலையத்தில் பயணிக்கும் பயணிகளின் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா முதன்மையான இடமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளன.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2021 ஆம் ஆண்டில் 29.1 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர போக்குவரத்தை எட்டிய பின்னர், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக உலகின் பரபரப்பான சர்வதேச மையமாக அதன் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது.
இந்த உலகளாவிய மையமானது 73 திட்டமிடப்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் வழியாக 92 நாடுகளில் உள்ள 193 இடங்களுடன் இணைக்கின்றது. மேலும் முதல் காலாண்டில் விமான இயக்கங்கள் மொத்தம் 81,966 ஆக இருந்தது. இது 2021 இன் கடைசி காலாண்டுடன் ஒப்பிடும்போது 5.8 சதவீதம் அதிகமாகும், அப்போது துபாய் விமான நிலையம் 77,475 விமானங்களை பதிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.