சவூதி, குவைத், ஓமான் நாடுகளுக்கு இடையேயான விமானங்களை நிறுத்தம் செய்த அமீரக விமான நிறுவனங்கள்..!! புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி..!!
ஐரோப்பாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலானது கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் வேமாகப் பரவி வருவதாக பிரிட்டன் தெரிவித்திருந்ததை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. வளைகுடா நாடுகளில் சவூதி அரேபியா, ஓமான் மற்றும் குவைத் ஆகிய மூன்று நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதித்து தனது எல்லைகளையும் மூடியுள்ளது.
முதலில் சவூதி அரேபியா ஒரு வாரத்திற்கு சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் சூழ்நிலையினைப் பொறுத்து மேலும் ஒரு வாரம் தடை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து ஓமான் மற்றும் குவைத் ஆகிய இரு வளைகுடா நாடுகளும் நேற்று தனது எல்லைகளை மூடி சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.
இதனால், நேற்று முதலே சவூதி அரேபியாவிற்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் தற்பொழுது குவைத் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையேயான விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளன.
இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்த மூன்று நாடுகளுக்கும் இயக்கப்படும் விமான சேவைகளானது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.