துபாய்: சென்னை, திருச்சி பயணிகள் கவனம்..!! ஒரு வாரத்தில் மட்டுமே டைவர்ட் செய்யப்படும் 1,000 க்கும் மேற்பட்ட விமானங்கள்..!!
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை மே 9 முதல் ஜூன் 22 வரை 45 நாட்களுக்கு மூடப்படுவதன் காரணமாக பல விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என்று அதிகாரிகள் சமீபத்தில் அறிவித்திருந்தனர். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் இந்த மேம்பாட்டு பணிகளுக்காக வாரத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள், துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் மற்றும் ஷார்ஜா விமான நிலையத்தில் உள்ள மற்ற டெர்மினல்களுக்கு திருப்பி விடப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த ஓடுபாதை மூடப்படும் காலத்தில் துபாய்க்கு அல்லது அங்கிருந்து செல்லத் திட்டமிடும் பயணிகள், தங்கள் பயணத்தைத் தொடங்கும் முன், தங்கள் விமான விவரங்கள் மற்றும் புறப்படும் மற்றும் வந்தடையும் விமான நிலையங்கள் குறித்த விபரங்களை விமான நிறுவனத்துடன் மீண்டும் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஃப்ளைதுபாய் போன்ற விமான நிறுவனங்களும் தனது சேவைகளை மற்ற விமான நிலையங்களுக்கு மாற்றுவதாக பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி Flydubai விமானத்தில் பயணம் செய்பவர்களில் சென்னை, தோஹா, மஸ்கட், கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, ரியாத், பஹ்ரைன், குவைத், சலாலா, மதீனா, ஜித்தா, தைஃப், தம்மம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் இந்த ஓடுபாதை மூடல் காரணமாக மற்ற விமான நிலையங்களுக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் DWC இலிருந்து பயணிக்கும் Flydubai பயணிகள் விமான நிலையத்தில் இலவச பார்க்கிங்கை அனுபவிப்பார்கள் என்றும் கூடுதலாக, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் DWC மற்றும் DXB இல் உள்ள அனைத்து டெர்மினல்களுக்கும் இடையே இலவச பேருந்து சேவையை வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணம் செய்பவர்களில் திருச்சி, கோழிக்கோடு போன்ற இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் புதிய கால அட்டவணையைப் பார்க்க http://blog.airindiaexpress.in என்பதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் புறப்படும் மற்றும் வருகை புரியும் விமான நிலையங்களை மீண்டும் உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.