‘ரியாத் ஏர்’ விமான நிறுவனத்திற்கு திட்டமிடப்படும் பிரம்மாண்ட நேர்காணல்… 3 வருடங்களில் 700 பைலட்டுகள் மற்றும் பல பிரிவுகளில் ஆட்சேர்ப்பு..!!
சவுதி அரேபியாவில் புதிதாக தொடங்கப்படும் ‘ரியாத் ஏர்’ விமான நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக பைலட்டுகளை தேர்ந்தெடுக்கும் விமான நிறுவனம், அடுத்த கட்டமாக கணிசமான எண்ணிக்கையில் கேபின் க்ரூ, இன்ஜினியரிங் மற்றும் ஐடி வல்லுநர்களைச் சேர்க்கவும் முடிவெடுத்துள்ளது.
பைலட்டுகளை பொறுத்தவரை, போயிங் 787-9s மற்றும் 777s போன்ற விமானங்களை இயக்குவதில் அனுபவம் உள்ள 20 பைலெட்டுகளை பணியமர்த்தி தேவையான பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரியாத் யார் விமான நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி பீட்டர் பெல்லூவின் கூறும்பொழுது, பைலட்டுகளுக்கான நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் முதல் கட்டமாக சில விமானிகள் நிறுவனத்துடன் இணைவார்கள் என்றும், அதற்கு அடுத்த கட்டமாக ஜனவரி முதல் மீதமுள்ள விமானிகள் நிறுவனத்துடன் இணைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ரியாத் ஏர் என்பது புதிதாக தொடங்கப்படும் விமான நிறுவனமாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள பிரபல விமான நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், முதல் கட்டத்திலேயே பிரதான வழித்தடங்களுக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே விமான நிறுவனத்திற்கு பெருமளவு ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து தகவல்கள் ஏற்கனவே இணையதளங்களில் வெளியான நிலையில் ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து பெருமளவு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே, நாடு முழுவதிலும் உள்ள திறமையான விமானிகள், கேபின் குழுவினர் மற்றும் பொறியியல் பணியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இது அமையும் என கூறியுள்ளார்.
கேபின் க்ரூ பணியிடங்களை நிரப்புவதற்கு முதல் கட்டமாக ஏற்கனவே விமான நிறுவனங்களில் அனுபவமுள்ள வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பிரத்தியேக தரவு தளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த விபரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக திறமையுள்ள கேபின் குழுவை நிர்ணயித்த பிறகு, அவர்களின் மூலம் அடுத்த கட்டமாக தேர்ந்தெடுக்கப்படும் கேபின் குழுவிற்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறியவர் அக்டோபர் மாதம் தொடங்கும் பயிற்சியானது 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என கூறியுள்ளார்.
பைலட்டுகளுக்கு வழங்கப்படும் பயிற்சியானது முதல் கட்டமாக சவுதி அரேபியா மற்றும் லண்டனில் வழங்கப்படும் என்றும், கேபின் க்ரூப் குழுவிற்கு வழங்கப்படும் பயிற்சியானது முதல் கட்டமாக சவுதி அரேபியாவில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, திறமையான பணியாளர்களை உருவாக்கி 2025 ஆம் ஆண்டில் ‘ரியாத் ஏர்’ விமான நிறுவனமானது பிரமாண்டமாக திறக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.