UAE: கொரோனாவை எதிர்த்து போராடிய முன்னணி சுகாதார ஊழியர்களின் 700 குழந்தைகளுக்கு “இலவச கல்வி”..!! அறிவிப்பு வெளியிட்ட கல்வி அமைச்சகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னின்று சிகிச்சை அளிப்பதிலும் தங்களை முழுநேரமும் ஈடுபடுத்திக்கொண்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், அமீரகத்தில் பணிபுரியும் முன்னணி சுகாதார ஊழியர்களின் 700 குழந்தைகளுக்கு “இலவச கல்வி” வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சகம் (MoE) அறிவித்துள்ளது.
முன்னணி சுகாதார மருத்துவர்களின் இக்குழந்தைகள், 12 ஆம் வகுப்பு நிறைவடையும் வரையிலும் அமீரகத்தின் பப்ளிக் ஸ்கூல்களில் இலவசமாக தங்களின் பள்ளி படிப்பை தொடர முடியும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரர்களின் பங்கினை அங்கீகரிக்கும் வகையில் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும், நாட்டுக்கு உதவவும் மருத்துவ ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தியாகங்களை தொடர்ந்து செய்து வருவதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சகம் (MoE) அறிவித்துள்ள இந்த இலவச கல்வி வழங்கும் முயற்சிக்கு அமீரகத்தின் பல மருத்துவமனைகளை சார்ந்த மருத்துவர்களும், முன்னணி சுகாதார ஊளியர்களும் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ ஊழியர்கள் கூறுகையில், “மக்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதும், அவர்களின் உயிரைப் பாதுகாப்பதும் நமது முக்கிய பொறுப்பாகும். முன்னணி சுகாதார ஊழியர்களை பாராட்டும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் முயற்சிக்கு நாங்கள் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். கல்வி அனைவருக்கும் முக்கியமானது, மேலும் முன்னணி மாணவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவது எங்கள் மருத்துவ சேவையை இன்னும் அதிகமாக நேசிக்க வைக்கிறது. மேலும் மக்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற எங்களுக்கு தைரியம் அளிக்கிறது” என்று கூறியுள்ளனர்.
மேலும் அமீரகத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அமீரக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.