எமிரேட்ஸ் ஐடி, கொரோனா சான்றிதழ் போன்ற நடைமுறைகளை அபுதாபிக்குள் நுழைபவர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்..!! அபுதாபி காவல்துறை வலியுறுத்தல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் நபர்கள் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
அபுதாபி எல்லையில் வைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடிகளில் போக்குவரத்தை எளிதாக்கும் பொருட்டு, பயணிகள் அபுதாபிக்குள் நுழையும் போது தங்களது எமிரேட்ஸ் ஐடி மற்றும் கொரோனாவிற்கான பரிசோதனை சான்றிதழ்களைக் காட்ட வேண்டும் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் முக கவசங்களை அணிவது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் வாகன ஓட்டுநர்களை சேர்த்து மொத்தம் மூன்று நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓட்டுநர்கள் சோதனைச் சாவடிகளில் பொருத்தமான பாதைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதாவது வெவ்வேறு வகையான வாகனங்களுக்கு வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட சைன்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன – அவசரகால வாகனங்களுக்கு சிவப்பு, கனரக வாகனங்களுக்கு நீலம் மற்றும் அபுதாபிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான சைன்போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமீரகத்தின் மற்ற பகுதியில் இருந்து அபுதாபிக்கு வந்து ஆறு நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் நபர்கள் அல்லது மற்ற பகுதிகளுக்கு சென்று மீண்டும் அபுதாபிக்கு வந்து 6 நாட்களுக்கு மேல் தங்கும் அபுதாபி குடியிருப்பாளர்கள் ஆறாவது நாளில் கொரோனாவிற்கான PCR சோதனையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவிற்கு எதிரான போரில் சமூக உறுப்பினர்கள் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி, பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு கட்டுப்படுமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
#أخبارنا | #شرطة_أبوظبي تدعو السائقين للالتزام بإجراءات النقاط الأمنية لدخول إمارة أبوظبيhttps://t.co/Y2PGB7rOKD pic.twitter.com/TQ0U1URkad
— شرطة أبوظبي (@ADPoliceHQ) October 26, 2020