பல மாதங்களுக்குப் பிறகு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு அனுமதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பையொட்டி மூடப்பட்டிருந்த மசூதிகள் கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும் இதுவரையிலும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை முதல் மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்தலாம் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் (NCEMA) இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.
மீண்டும் வெள்ளிக்கிழமை தொழுகை மசூதிகளில் நடத்தப்படும் போது 30 சதவீதத் திறனில் மட்டுமே தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் ஒரு விர்ச்சுவல் முறையில் நடைபெற்ற மாநாட்டின் போது தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, பிரசங்கத்திற்கு (குத்பா) 30 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகள் திறக்கப்படும் என்றும், தொழுகை நடந்த 30 நிமிடங்கள் கழித்து மசூதிகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவை இரண்டும் மொத்தம் 10 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து தொழுகையின் போதும், தொழுகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகள் திறக்கப்படும் மற்றும் மஹ்ரிப் தொழுகைக்கு மட்டும் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு மசூதிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அனைத்து மசூதிகளும் தொழுகைக்கு 10 நிமிடங்கள் கழித்து மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிபாட்டாளர்கள் தொழுகையின் போது கட்டாயமாக முக கவசங்களை அணிய வேண்டும், மற்றும் அவர்கள் தங்கள் சொந்த முஸல்லா கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமானவர்கள் மசூதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.