UAE: 5 அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் இனி ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.. துபாய் சுகாதார ஆணையம் தகவல்
துபாய் குடியிருப்பாளர்கள் தங்கள் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு Pfizer-BioNTech கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு இப்போது அப்பாய்மெண்ட்களை பதிவு செய்யலாம் என சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. துபாய் சுகாதார ஆணைய (DHA) செயலியில் பெற்றோர்கள் இதற்கான அப்பாய்மெண்ட்டை பதிவு செய்யலாம்.
அதனுடன் சேர்த்து சில தனியார் மருத்துவமனைகளும் இந்த தடுப்பூசி சேவையை வழங்குகின்றன. சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு அக்டோபரில் 5-11 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசியை அவசரகாலமாக பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது. இதன் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகள் தடுப்பூசி “பாதுகாப்பானது” என்றும், உண்மையில் இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுத்துள்ளது என்றும் அமைச்சகம் கூறியிருந்தது.
இந்த நிலையில் 5 வயது முதல் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி சேவை வழங்கப்பட்டு்வருவதாக கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 3-17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.