UAE: இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட்டை ஒரு வருடத்திற்கு முன்பே புதுப்பிக்கலாம்..!! தூதரக அதிகாரி அறிவுறுத்தல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது காலாவதியான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கடைசி தருணம் வரை காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“பாஸ்போர்ட்கள் காலாவதியாகும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை நாம் புதுப்பிக்கலாம். பயண ஆவணத்தை புதுப்பிக்க காலாவதியாகும் வரை நிறைய பேர் காத்திருக்கிறார்கள். கடைசி நிமிட அவசரத்தை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் புதுப்பித்தலை முன்கூட்டியே திட்டமிட பரிந்துரைக்கப்படுகிறது” என்று இந்திய துணை தூதரகத்தின் பாஸ்போர்ட், கல்வி மற்றும் சான்றளிப்பு பிரிவு அதிகாரி ராம்குமார் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிப்பவர்களில் போலீஸ் சரிபார்ப்பு தேவையில்லாத விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படுவதை உறுதி செய்ய தூதரகம் செயல்பட்டு வருகிறது என்று தங்கராஜ் கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம், பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான போலீஸ் சரிபார்ப்பு நெறிமுறையை கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தியமைத்திருந்தது.
எனினும் விண்ணப்பதாரரின் பாஸ்ப்போர்ட்டில் முகவரி, பெயர் அல்லது மற்ற விவரங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அவை போலீஸ் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் விவரங்களில் எந்த மாற்றமும் இல்லாத விண்ணப்பங்கள் காவல்துறை சரிபார்ப்பு இல்லாத பிரிவில் அடங்கும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
“எங்கள் சேவைகளை முடிந்தவரை விரைவாக வழங்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். விண்ணப்பம் வந்தவுடன் நாங்கள் அதை புதுப்பித்து வழங்குகிறோம். போலீஸ் சரிபார்ப்பு தேவைப்படும் பாஸ்போர்ட்டுகளுக்கு அதிகபட்சம் 30 வேலை நாட்களுக்குள் அட்டெஸ்டேஷன் முடிக்கப்பட வேண்டும்” எனவும் தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில் சில அவசர வழக்குகளில், விண்ணப்பதாரர் தங்களின் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான போலீஸ் சரிபார்ப்பை, பிந்தைய சரிபார்ப்பாக அதாவது பாஸ்போர்ட் பெற்ற பிறகு மாற்றிக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் வழியாகவும் பாஸ்ப்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டவுடன் போலீஸ் சரிபார்ப்பு செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால், ‘ஷோ-காஸ்’ நோட்டீஸ் வழங்கப்படும். கிரிமினல் வழக்கு குறித்து விண்ணப்பதாரர் சரியான விளக்கத்தை அளிக்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் விளக்கியுள்ளார்.