ஓமானைத் தாக்கிய அதிபயங்கர சூறாவளி..!! சுழன்று அடித்த காற்றால் பல சொத்துகள் நாசம்..!!.
ஓமானின் தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் உள்ள ஜாலான் பானி பு அலி விலாயத் பகுதியானது சனிக்கிழமையன்று மோசமான வானிலையால் தாக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி அப்பகுதியில் ஏற்பட்டதாக ஓமான் வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு அல் ஷர்கியா, வடக்கு அல் ஷர்கியா மற்றும் மஸ்கட், அல் தகிலியா மற்றும் அல் வுஸ்தா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் 20 மிமீ முதல் 75 மிமீ வரை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (CAA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேசமயம், இடியுடன் கூடிய மழையின் காரணமாக தூசி அதிகரிக்கும் என்பதால் கிடைமட்டத் தெரிவுநிலை மோசமாக இருக்கும் என்றும், பலத்த மழையினால் சாலைகளில் ஆங்காங்கே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் குடியிருப்பாளர்களுக்கு CAA எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியான தகவல்களின்படி, சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கரமான சூறாவளி ஜாலானில் பல சொத்துக்களை நாசமாக்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இரண்டாவது சக்திவாய்ந்த சூறாவளி ஜாலன் பானி பு அலியை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த பயங்கரமான சூறாவளியையும் பல குடியிருப்பாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.