UAE: எக்ஸ்போவிற்கு செல்ல விரும்புகிறீர்களா..?? உங்களுக்கான முழுமையான வழிகாட்டி இங்கே..!!
உலகமே எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 துபாய் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. கடந்த 2020 ம் வருடம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட எக்ஸ்போ 2020 கண்காட்சியானது, வரும் அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரையிலான நாட்களில் துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த உலகக் கண்காட்சியில் நீங்கள் அதிகம் பயனடைவதை உறுதி செய்யவும், உங்கள் வருகையை திட்டமிடவும், எக்ஸ்போ தளத்திற்கு செல்லவும் மற்றும் அதன் சிறப்பை அனுபவிக்கவும் நாங்கள் எக்ஸ்போ வழிகாட்டி புத்தகத்தை ஒன்றாக இணைத்து இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
எக்ஸ்போ செல்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலிருந்து, எக்ஸ்போ தளத்திற்குச் செல்வது மற்றும் அதன் பல்துறை அனுபவங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளை அனுபவிப்பது வரை, இங்கே எக்ஸ்போ 2020 ன் முழு கையேடும் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்போ 2020 டிக்கெட்..
ஒரு முறை செல்வதற்கான டிக்கெட் விலை 95 திர்ஹம் என்றும் ($26) தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கட்டுப்பாடற்ற நுழைவை வழங்கும் டிக்கெட்டிற்கான விலை, 195 திர்ஹம் என்றும் ($53), மற்றும் எக்ஸ்போ 2020 இன் ஆறு மாதங்களுக்கும் வரம்பற்ற நுழைவைப் பெறுவதற்கான டிக்கெட் விலை 495 திர்ஹம் ($135) என்றும் விநியோகிக்கப்படுகிறது.
18 வயதிற்குட்பட்ட பார்வையாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நுழைவு இலவசம். அவர்களுடன் சேர்ந்து வரும் நபருக்கும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
எக்ஸ்போ 2020 துபாய் டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும். மேலும் குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்கள் தங்கள் டிக்கெட்டுகளை துபாய் மெட்ரோ நிலையங்கள் அல்லது ENOC மற்றும் EPPCO பெட்ரோல் சேவை நிலையங்களில் உள்ள ZOOM கடைகளிலிருந்தும் வாங்கலாம்.
எக்ஸ்போ தளத்திற்கான நுழைவு வாயில்கள்..
சஸ்டெய்னெபிலிட்டி (Sustainability), ஆப்பர்சூனிட்டி (Opportunity) மற்றும் மொபிலிட்டி (Mobility) என்ற மூன்று வகையான தீமில் (Theme) உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்போ தளத்திற்கு மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. இவை இஸ்லாமிய நாகரிகத்தின் மஷ்ரபிய கட்டிடக்கலையை பறைசாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 21 மீட்டர் உயரமும், 30 மீட்டர் நீளமும் உள்ள இந்த நுழைவு வாயில்கள் எக்ஸ்போவில் பார்வையாளர்களை ஈர்க்கும் சிறப்புகளில் ஒன்றாகும்.
எக்ஸ்போ தளத்தை எப்படி அடைவது..??
மெட்ரோ பயணம்..
நீங்கள் மெட்ரோவில் பயணம் செய்கிறீர்கள் என்றால், ரூட் 2020 உங்களை நேரடியாக எக்ஸ்போ 2020 க்கு அழைத்துச் செல்லும். பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எக்ஸ்போ 2020 மெட்ரோ ஸ்டேஷன் தளத்திற்கு நேராக சென்றடைய முடியும். இது எக்ஸ்போ 2020 இடத்தின் மையப்பகுதியான அல் வாஸல் பிளாசாவிலிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே உள்ளது.
துபாய் நகர பேருந்து பயணம்..
நீங்கள் துபாய் நகர பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால், எக்ஸ்போ 2020 செல்லும் பார்வையாளர்களுக்காகவே துபாய் முழுவதிலும் இருந்து RTA இயங்கும் இலவச சிறப்பு பேருந்து தளத்தை நேரடியாக சென்றடைய முடியும். மேலும் அங்கு பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து நுழைவு வாயில்களுக்கு இடையே பயணம் செய்யவும், கார் பார்க்கிங் செய்யும் இடத்திலிருந்து தளத்திற்கு செல்லவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பிற எமிரேட்ஸில் இருந்து பேருந்து பயணம்..
துபாய் தவிர மற்ற பிற எமிரேட்ஸில் இருந்து நீங்கள் பேருந்தில் எக்ஸ்போ தளத்தை சென்றடைய பார்வையாளர்களுக்காகவே 77 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
சொந்த வாகனத்தில் பயணம்..
நீங்கள் எக்ஸ்போ 2020 தளத்திற்கு உங்களின் சொந்த வாகனத்தில் பயணம் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள நான்கு வாகன நிறுத்துமிடங்களில் ஒன்றை சென்றடைய அதற்கான வழித்தடத்தை பின்பற்ற வேண்டும்.
– ஆப்பர்சூனிட்டி பார்க்கிங் மண்டலம் (E77 எக்ஸ்போ சாலையில் இருந்து செல்லலாம்)
– சஸ்டெய்னெபிலிட்டி பார்க்கிங் மண்டலம் (E77 எக்ஸ்போ சாலை அல்லது D54 சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலையில் இருந்து செல்லலாம்)
– மொபிலிட்டி பார்க்கிங் மண்டலம் (E311 ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இருந்து செல்லலாம்)
– துபாய் கண்காட்சி மையம் பார்க்கிங் மண்டலம் (E311 ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இருந்து செல்லலாம்)
எக்ஸ்போ 2020 தளத்தின் பார்க்கிங் வசதிகள்..
எக்ஸ்போ தலத்தில் கார் பார்க்கிங் இலவசம். மொத்தம் இங்கு 26,000 பார்க்கிங் இடங்கள் உள்ளன. அவை வார நாட்களில் காலை 8.30 முதல் மறுநாள் அதிகாலை 1.30 வரை திறந்திருக்கும். மற்றும் வார இறுதி நாட்களில் அல்லது சிறப்பு விடுமுறை நாட்களில் காலை 8.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். மேலும் ஒரு நாள் டிக்கெட் பெற்றவர்களில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வேலட் பார்க்கிங் வசதியும் வழங்கப்படும்.
ஹோட்டல் வசதி..
எக்ஸ்போ 2020 துபாயில் பார்வையாளர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள ஒரே ஹோட்டலான ‘தி ரோவ்’ ஹோட்டல் இப்போது முன்பதிவு செய்து வருகிறது. ஒரு அறைக்கு ஒரு இரவுக்கு தோராயமாக 1,000 திர்ஹம் செலவாகும். இங்கு தாங்கும் விருந்தினர்களுக்கு எக்ஸ்போவிற்கான இலவச டிக்கெட்டும் கிடைக்கும். மேலும் இந்த ஹோட்டலில் 312 அறைகளும் மற்றும் 19 சூட்களும் உள்ளன.
எக்ஸ்போ மொபைல் ஆப்..
அக்டோபர் 1 ஆம் தேதி எக்ஸ்போ 2020 கண்காட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும் போது பதிவிறக்கத்திற்கு தயாராக இருக்கும் எக்ஸ்போ மொபைல் ஆப், இங்கு நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கவர்ச்சிகளின் தகவல்களை வழங்கும்.
எக்ஸ்போ தளத்திற்குள்ளேயே இலவச பஸ் பயணம்..
எக்ஸ்போ 2020 தளத்தில் வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் இலவசமாக செல்ல உதவும் வகையில் 27 பிரத்யேக பேருந்துகள் இருக்கும். மேலும் இங்கு 14 பேருந்து நிறுத்தங்கள் மூலமாக ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும்.
எக்ஸ்போ 2020 ரயில் பயணம்..
பார்வையாளர்களுக்காக எக்ஸ்போ தளத்திற்கு உள்ளேயே ஒரு சிறப்பு ரயில் சேவையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரயில் பயணமானது எக்ஸ்போ தளத்தின் ஒரு தனித்துவமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும். மேலும் வீல் சேர் பயன்படுத்துபவர்களும் அணுகக்கூடிய வகையில் இந்த ரயில் இருக்கும்.
AI தொழிநுட்பதில் பார்வையாளர்களுக்கு உதவ டிஜிட்டல் சாட்போட்..
எக்ஸ்போ 2020 செல்லும் பார்வையாளர்களுக்கு உதவ ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனும் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘அமல்’ என்ற டிஜிட்டல் சாட்போட், எக்ஸ்போ வலைத்தளம் மற்றும் எக்ஸ்போ மொபைல் ஆப் உட்பட தளங்களில் கிடைக்கும். இது எக்ஸ்போ தளத்தை சுற்றிப்பார்க்க உங்களுக்கு வழிகாட்டும் மற்றும் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இதனால் பதிலளிக்க முடியும்.
ஸ்மார்ட் துபாயுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் சாட்போட்டை 10 மொழிகளில் தொடர்பு கொள்ள முடியும். எக்ஸ்போவின் நிகழ்ச்சிகள் மற்றும் ஈர்ப்புகள் பற்றிய தகவல்களை சேகரித்து உலக கண்காட்சியின் ஆறு மாதங்கள் முழுவதும் கருத்துக்களை இது வழங்கும்.
கியூவில் நிற்காமல் நேரடியாக செல்லும் வசதி..
எக்ஸ்போ 2020 துபாயின் அமைப்பாளர்கள், தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க ஸ்மார்ட் கியூ என்ற அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்,.இது உங்கள் வருகையை முன்கூட்டியே திட்டமிடவும், நேரத்தை முன்பதிவு செய்யவும் மற்றும் வரிசையில் நிற்காமல் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெவிலியனிற்கு செல்லவும் உதவும்.
எக்ஸ்போ மொபைல் ஆப் மூலம் நீங்கள் ஸ்மார்ட் கியூ அமைப்பைப் பயன்படுத்தலாம், இதில் GOS-இயக்கப்பட்ட வரைபடம், தளத்திற்கு செல்ல படிப்படியான திசைகள் மற்றும் ஒரு உணவக முன்பதிவு அமைப்பு ஆகியவை அடங்கும். எக்ஸ்போ டிக்கெட்டை முன்பதிவு செய்யும் ஒவ்வொரு பார்வையாளரும் பங்கேற்கும் பெவிலியன்களில் ஒன்றைப் பார்வையிட ஒரு இலவச ஸ்மார்ட் கியூ பாஸைப் பெறுவார்கள். மற்ற பெவிலியன்களுக்கான கூடுதல் ஸ்மார்ட் கியூ பாஸ்களை முன்பதிவு செய்ய பார்வையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.