கடலில் குப்பைகளை கொட்டினால் 50,000 ரியால் வரை அபராதம் மற்றும் சிறை தண்டனை… எச்சரிக்கை விடுத்த ஓமான் அரசு..!!
நாட்டின் கடல் வளத்தினை பாதுகாப்பதற்கு ஓமான் அரசு முக்கிய முடிவினை அறிவித்துள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியின்றி கடலுக்குள் கழிவுகள், குப்பைகள், தேவையில்லாத பொருட்கள் போன்றவற்றை கொட்டினால், ஒரு மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனை மற்றும் 50,000 ஓமான் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டம், சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியின்றி கடல் சூழலில் கழிவுகள் அல்லது குப்பைகளை எவ்வித காரணமாக இருந்தாலும் கொட்டுவதைத் தடை செய்கிறது.
மேலும், இந்த விதியினை மீறுபவர்களுக்கு ஒரு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை குற்றத்தினை பொறுத்து தண்டனை விதிக்கப்படும் என்றும், மேலும் 5,000 ரியால் முதல் 50,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடல் வளங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பில் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றன. எனவே கழிவுகள் மற்றும் குப்பைகளை கடலில் கொட்டும் பொழுது கடல் நீர் மாசுபாடு அடைவதால் அதில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, இதனை கருத்தில் கொண்டு நாட்டில் வசிக்கும் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஓமான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.