கொரோனாவிற்கு எதிராக 100% தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடாக உருவெடுத்த அமீரகம்..!! அதிகாரிகள் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில் அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகம் தேசிய கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தின் விரும்பிய இலக்கை அடைந்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது மற்றும் நாட்டிலுள்ள தடுப்பூசி போட வேண்டிய இலக்கு குழுக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையை முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேசிய தடுப்பூசி பிரச்சாரத்தின் மகத்தான முயற்சிகளின் வெற்றியை இது குறிக்கிறது. நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் சுகாதார நிலையங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் தடுப்பூசிகளை வழங்கியதே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி டோஸ்கள் மற்றும் அனைத்து வகையான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளானது நாட்டின் மக்கள்தொகையில் 100 சதவிகிதம் நோய்த்தடுப்பு என்ற இலக்கை அடைய பங்களித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தடுப்பூசி போடுவதற்கான தகுதியான பிரிவினரில் நூறு சதவீதத்தினர் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.