UAE: அல் காதிசியா குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த 3,936 க்கும் மேற்பட்ட பேச்சுலர்கள் வெளியேற்றம்..!! ஷார்ஜா நகராட்சி நடவடிக்கை..!!
அல் காதிசியா குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி தங்கியிருந்த பேச்சுலர்களை வெளியேற்ற உச்சநீதிமன்ற உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிம் அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஷார்ஜா நகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட 1,514 சோதனைகளின் போது குடும்பத்தினர்கள் மட்டுமே தங்க அனுமதியளிக்கப்பட்டிருந்த 185 குடியிருப்புகளில் தங்கியிருந்த சுமார் 3,936 க்கும் மேற்பட்ட பேச்சுலர்களை ஷார்ஜா நகராட்சியினர் வெளியேற்றியுள்ளனர்.
அல் காதிசியா குடியிருப்பு பகுதியில் அதிக எண்ணிக்கையிலான பேச்சுலர்கள் தங்கியிருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் ஒரு அமீரக பெண் அளித்த புகாரினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், குடியிருப்பு விதிகளை மீறி பேச்சுலர்கள் தங்க அனுமதியளித்ததற்காக 161 குடியிருப்பு பிரிவுகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும், மேலும் 169 குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் ஷார்ஜா நகராட்சியினர் வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வின் போது குடியிருப்பு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பார்ட்டிஷன் மற்றும் மின்சாரம் பயன்பாடு உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டிருந்த 79 வீடுகளுக்கான அனைத்து இணைப்புகளையும் ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (SEWA) ஒருங்கிணைப்பில் ஷார்ஜா நாகராட்சியினர் துண்டித்துள்ளனர்.
ஷார்ஜா நகராட்சி மற்றும் ஷார்ஜா காவல்துறை இணைந்து மேற்கொண்டு வரும் இந்த தீவிர ஆய்வு இப்பகுதியில் தொடரும் என்றும் விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் தங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.