அமீரகத்தில் மீண்டும் ‘Work From Home’.. 70 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருவதால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 70 சதவீத அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் ‘Work From Home’ முறை உம் அல் குவைனில் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து உம் அல் குவைனின் நிர்வாகக் குழு இன்று (ஜனவரி 17) திங்களன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இயல்பாகவே அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லாத பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை பொருந்தும், மீதமுள்ளவர்கள் தங்கள் வேலை தொடர்பான கடமைகளை முடிக்க அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் நிர்வாக குழுவால் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை இம்மாதம் ஜனவரி இறுதி வரையிலும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது. அமீரகத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மீண்டும் ‘Work From Home’ நடைமுறை அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 17) மட்டும் 2,989 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளதாகவும், கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) உறுதி செய்துள்ளது.