அமீரகத்திற்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கிய சவூதி..!! விமான சேவையை மீண்டும் இயக்கவுள்ள நிறுவனங்கள்..!! பயண நடைமுறை என்ன..??
சவூதி அரேபிய அரசானது கொரோனா அதிகம் பாதித்து ரெட் லிஸ்ட் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்த்து கடந்த சில மாதங்களாக பயணத்தடையை விதித்திருந்தது. தற்பொழுது அமீரகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்த பட்டியலில் இருந்து அமீரகத்தை நீக்கி பயணத்தடையை விலக்கிக் கொள்வதாக சவூதி அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் மற்றும் அபுதாபியின் எத்திஹாட் செப்டம்பர் 11 முதல் சவூதிக்கு மீண்டும் விமான சேவைகளை தொடங்குவதாகவும், மற்றுமொரு விமான நிறுவனமான ஃப்ளைதுபாய் செப்டம்பர் 12 முதல் மீண்டும் விமான சேவைகளை இயக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
அதேபோல், ஷார்ஜாவை தளமாகக் கொண்ட ஏர் அரேபியா ட்விட்டரில் செப்டம்பர் 14 முதல் தினமும் சவூதிக்கு விமான சேவைகளை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிஹாட்
எதிஹாட் நிறுவனம் செப்டம்பர் 11 முதல் ரியாத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தனது இணையதளத்தில் கூறியுள்ளது. செப்டம்பர் 14 முதல் ஜித்தாவிற்கும் செப்டம்பர் 15 முதல் தமாமிற்கும் விமான சேவைகளை இயக்கவுள்ளதாக கூறியுள்ளது.
எமிரேட்ஸ்
எமிரேட்ஸ் விமான நிறுவனம் சவுதி அரேபியாவிற்கு வாரத்திற்கு 24 விமானங்களை இயக்கும் என்றும் இதில் ரியாத், ஜித்தா மற்றும் தம்மம் ஆகியவற்றுக்கான தினசரி விமானங்கள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மதீனாவிற்கு வாரம் மூன்று விமானங்களை இயக்கும் என்றும் கூறியுள்ளது. செப்டம்பர் 16 முதல் ரியாத் செல்லும் விமானங்கள் தினமும் இரட்டிப்பாக அதிகரிக்கும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃப்ளைதுபாய்
பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளைதுபாய் செப்டம்பர் 12 முதல் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரியாத், ஜித்தா மற்றும் தம்மமிற்கு தினசரி விமான சேவையை மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளது.
ஏர் அரேபியா
இது செப்டம்பர் 14 முதல் ஷார்ஜாவிலிருந்து ரியாத், ஜித்தா மற்றும் தம்மம் வரை தினமும் விமான சேவைகளை இயக்கும் என்று விமான நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
மேலும் எமிரேட்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் சவூதிக்கு பயணிக்கும் நபரகளுக்கான தனிமைப்படுத்தல், PCR சோதனை உள்ளிட்ட பயண நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட பயணிகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சவூதி குடிமக்கள் அல்லாத பயணிகள் தங்களுக்கு தடுப்பூசி டோஸ்களைப் பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி தரவை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
அவர்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
சவூதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்
> ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்
> ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகாவின் இரண்டு டோஸ்
> மாடர்னாவின் இரண்டு டோஸ்
> ஜான்சன் & ஜான்சனின் ஒரு டோஸ்
சினோஃபார்ம் மற்றும் சினோவாக் ஆகிய இரண்டு டோஸ்களை முடித்த பயணிகள், மேலே குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட நான்கு தடுப்பூசிகளில் ஒன்றின் கூடுதல் டோஸைப் பெற்றிருக்க வேண்டும்.
தடுப்பூசி போடாத பயணிகள்
தடுப்பூசி போடப்படாத அனைத்து சர்வதேச பயணிகளும் தங்கள் சொந்த செலவில் ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தலை இரண்டு PCR சோதனைகளுடன் முடிக்க வேண்டும்.
யாருக்கு விலக்கு?
எமிரேட்ஸின் கூற்றுப்படி, பின்வரும் பயணிகள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
> சவுதி குடிமக்கள், சவூதி குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் அவர்களின் தாய்மார்கள், சவூதி குடிமக்களின் குழந்தைகள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் பிரிவில் உள்ள எந்தவொரு நபருடனும் வரும் வீட்டுப் பணியாளர்கள்.
இந்த பிரிவில் பயணிக்கும் தடுப்பூசி போடப்படாத பயணிகள் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தனிமைப்படுத்தலின் 6 வது நாளில் PCR சோதனை எடுக்க வேண்டும்.
> தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளருடன் வரும் தடுப்பூசி போடப்படாத வீட்டு வேலை செய்பவர்கள். இந்த பிரிவில் தடுப்பூசி போடப்படாத பயணிகள் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தனிமைப்படுத்தலின் 6 வது நாளில் PCR சோதனை எடுக்க வேண்டும்.
> டிப்ளமேடிக் விசா வைத்திருப்பவர்கள், அரசுப்பிரதிநிதிகள் மற்றும் அவர்கள் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் அவர்களது வீட்டுப் பணியாளர்கள், அவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
> கேபின் குழுவினர்
> அரசுத் துறைகளில் பணிபுரியும் சுகாதாரப் பயிற்சியாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் உடன்வரும் 18 வயதிற்குட்பட்ட பயணிகள். 18 வயதுக்குட்பட்ட பயணிகள் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இணங்க வேண்டும் மற்றும் சவூதி வந்தடைந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு PCR சோதனை மற்றும் தனிமைப்படுத்திக்கொண்டு 7 வது நாளில் மற்றொரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆதாரம்: எமிரேட்ஸ் இணையதளம்