உலக நாடுகளை மிஞ்சும் சவூதியின் அடுத்த பிரம்மாண்டம்- “நியூ முராப்பா”.. 3 இலட்சம் வேலைவாயப்பு.. 180 பில்லியன் ரியால் வருவாய்..!!
சவுதி அரேபியாவானது சமீப காலமாக நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்தி வந்து கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றாக கார்கள் இல்லாத, சாலைகள் இல்லாத, கார்பன் உமிழ்வே இல்லாத ஒரு நகரத்தை உருவாக்குவதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. “The Line” என கூறப்படும் இந்த திட்டத்தின் மூலம் புதியதொரு நகரம் உருவாக்கப்பட்டு அதில் மில்லியன் கணக்கில் மக்கள் குடியேறவும் இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய நவீன நகரமாக சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தை மாற்றும் முயற்சிக்கான திட்டம் ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய டவுன்டவுனை கொண்டுள்ள அதிநவீன நகரமாக ரியாத் உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்கள் புதிய நிறுவனமான நியூ முராப்பா டெவலப்மெண்ட் கம்பெனியை துவக்கி, இந்நிறுவனமானது இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவித்துள்ளார்.
ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பசுமையான பகுதிகளையும் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதைகளையும் உள்ளடக்கி புதிய முராப்பா திட்டம் கட்டமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இது ஒரு அருங்காட்சியகம், ஒரு தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், ஒரு பல்நோக்கு அதிவேக தியேட்டர் மற்றும் 80 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்களைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தின் வடமேற்கில் உள்ள கிங் சல்மான் மற்றும் கிங் காலித் சாலைகள் சந்திக்கும் இடத்தில், 19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தத் திட்டத்தில் 104,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள், 9,000 ஹோட்டல் அறைகள் மற்றும் 980,000 சதுர மீட்டருக்கும் அதிகமான விற்பனை பகுதிகள், அத்துடன் 1.4 மில்லியன் சதுர மீட்டர் அலுவலக இடம், 620,000 சதுர மீட்டரில் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் 1.8 மில்லியன் சதுர மீட்டர் இடம் சமூக மையங்களுக்காக அர்ப்பணிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், சவூதியை மேலும் வளர்ச்சியடைய செய்ய மேற்கொள்ளப்படும் 15 மெகா திட்டங்களின் பட்டியலில் இது சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டமானது சவூதி விஷன் 2030 க்கு ஏற்ப நகரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பதாக இருக்கும் எனவும் சவூதியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த புதிய முராப்பா திட்டமானது ஒரு தனித்துவமான வாழ்க்கை, வேலை மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை 15 நிமிட நடை சுற்றளவில் வழங்கும் மற்றும் இது அதன் சொந்த உள் போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் விமான நிலையத்திலிருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் இந்த பகுதியை அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக NMDC நிறுவனமானது 400 மீ உயரம், 400 மீ அகலம் மற்றும் 400 மீ நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றான முகாப் எனும் நவீன கட்டிடத்தை கட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன நஜ்தி கட்டிடக்கலை பாணியால் கட்டப்படவுள்ள முகாப், டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பத்தால் சமீபத்திய ஹாலோகிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் உலகின் முதல் அதிவேக இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முகாப் கட்டிடம் ஒரு சுழல் தளத்தின் மேல் ஒரு டவரையும், 2 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு கட்டமைப்பையும் உள்ளடக்கும் என்றும் இது ஒரு விருந்தோம்பல் இடமாக மாறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது குடியிருப்பு பகுதி மற்றும் ஹோட்டல் பகுதி, வணிக இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் வணிக, கலாச்சார மற்றும் சுற்றுலா இடங்களைக் கொண்டிருக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
NMDC இன் துவக்கமானது, நம்பிக்கைக்குரிய துறைகளின் திறன்களை மேம்படுத்தவும், தனியார் துறையை செயல்படுத்தவும் மற்றும் உள்ளூர் உள்ளடக்கத்தை அதிகரிக்கவும், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மற்றும் சவூதி பொருளாதாரத்திற்கான வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்தவும் PIF (Public Investment Fund) இன் உத்தியின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தில், 2030க்குள் 334,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 பில்லியன் சவூதி ரியால்கள் வரை ஈட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
The project will contribute to Riyadh’s future development, add SAR180 billion to non-oil GDP, and create 334,000 direct and indirect jobs.#NewMurabba#TheMukaab#SPAGOV pic.twitter.com/J66NfePaCG
— SPAENG (@Spa_Eng) February 16, 2023