8 மாதங்களுக்குப் பிறகு புதிய விசாக்களை வழங்க துவங்கிய ஓமான்..!!
ஓமானில் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் புதிய விசாக்கள் வழங்குவதை ராயல் ஓமான் காவல்துறை (ROP) தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்திருந்தது. தற்பொழுது 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய ரெசிடென்ஸ் விசாக்களை (பணி விசா) வழங்கத் தொடங்கியுள்ளதாக ROP தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்சி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், வேலை அல்லது ரெசிடென்ஸ் விசாக்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற முடியும், இது கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் இருந்ததைப் போலவே செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் ஃபார்மட்டில் ஆன்லைனில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து புதிய விசா வேண்டி விண்ணப்பிக்கலாம் என்றும், மார்ச் மாதத்தில் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்ததைப் போலவே ரெசிடென்ஸ் விசாக்கள் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் மற்றும் வதிவிட பொது இயக்குநரகம் இந்த மாதத்தில் இருந்து 21 நாட்கள் செல்லுபடியாகும் எக்ஸ்பிரஸ் விசாக்கள் மற்றும் ஃபேமிலி விசிட் விசாக்களை வழங்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் தேவையான தேவைகளைப் பூர்த்தி செய்தால் ROP விசாக்களை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ராயல் ஓமான் காவல்துறையின் வலைத்தளம் மூலமாகவோ அல்லது சனத் சென்டர் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.