அபுதாபி வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை நீக்க அபுதாபி அரசு முடிவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் ஜூலை 1 முதல் சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அபுதாபி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் இத்திட்டத்தின்படி அபுதாபியில் தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நீக்கப்படும் என்று அரபு நாளேடான எமரத் அல் யூம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, மே 3, 2021 முதல், ‘green countries’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி, வருகையின் போது மற்றும் 6 ஆம் நாளில் PCR பரிசோதனை செய்ய வேண்டும்.
பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வருகையின் போது PCR பரிசோதனையையும், ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தலையும், நான்காவது நாளில் மற்றொரு PCR பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். இந்த நெறிமுறை 28 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸினைப் பெற்று, அல்ஹோஸ்ன் பயன்பாட்டின் தடுப்பூசி அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கும், அபுதாபியில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘Green countries’ பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடாத குடிமக்கள் மற்றும் அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி வருகையின் போது PCR பரிசோதனையையும், ஆறு மற்றும் 12 நாட்களில் இரண்டு PCR சோதனைகளையும் எடுக்க வேண்டும்.
மற்ற நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வருகையின் போது PCR பரிசோதனையையும், 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலையும், எட்டாவது நாளில் மற்றொரு PCR பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும்.