வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருவதற்கான பயண நடைமுறைகளில் மாற்றம்..!! புதிய வழிமுறைகளை வெளியிட்ட பேரிடர் மேலாண்மைக் குழு..!!
அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவு குழுவானது வெளிநாட்டிலிருந்து அபுதாபிக்கு வரும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்களுக்கான பயண நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது.
இந்த புதிய பயண நடைமுறைகள் ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பசுமைப் பட்டியல் (green countries) என குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்றும் அவர்கள் வருகையின் போது ஒரு PCR சோதனையும் மற்றும் 6 வது நாளில் மற்றுமொரு PCR சோதனையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தியா போன்ற மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள், வருகையின் போது PCR சோதனை, ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 6 வது நாளில் ஒரு PCR சோதனை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெறிமுறை அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பசுமைப் பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் தடுப்பூசி போடப்படாத குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தனிமைப்படுத்தலின்றி வருகையின் போது PCR சோதனையும் அத்துடன் 6 மற்றும் 9 நாட்களில் PCR சோதனையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகள், வருகையின் போது PCR சோதனை, 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 9 வது நாளில் மற்றொரு PCR சோதனை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.