அபுதாபி, மஸ்கட் இடையே விரைவில் பேருந்து சேவை..!! தினசரி சேவையை தொடங்க ஒப்பந்தம்..!!
அமீரக தலைநகரான அபுதாபிக்கும் ஓமானின் தலைநகரான மஸ்கட்டிற்கும் இடையே தினசரி பேருந்து போக்குவரத்தை தொடங்குவதற்காக புதிய திட்டம் ஒன்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, புகழ்பெற்ற Asyad Group நிறுவனங்களில் ஒன்றான Mwasalat, அபுதாபியில் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கான உரிமம் பெற்ற நிறுவனமான Capital Express உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அபுதாபி எமிரேட்டில் உள்ள அல் அய்னில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திலிருந்தும், ஓமானில் உள்ள புரைமி பேருந்து நிலையத்திலிருந்தும் தினசரி பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச பேருந்து போக்குவரத்து வலையமைப்பை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அல் புரைமியின் விலாயத்தில் உள்ள பேருந்து நிலையத்தை அல் அய்ன் நகரில் உள்ள பேருந்து நிலையத்துடன் இணைப்பதை இந்த சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அபுதாபியில் இருந்து அல் அய்ன் வழியாக, மஸ்கட் மற்றும் சலாலா வரை பயணிக்கவும் அதே போல் மஸ்கட் மற்றும் சலாலாவில் இருந்து அபுதாபி பயணிக்கவும் மற்ற வழித்தடங்களுடன் ஒருங்கிணைத்து, பயணிகள் போக்குவரத்து சேவையை இந்த பாதை வழங்கும் என கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தில் Mwasalat-ன் தலைமை நிர்வாக அதிகாரி பத்ர் பின் முகமது அல்-நதாபி மற்றும் கேபிடல் எக்ஸ்பிரஸின் இயக்குநர்கள் குழு உறுப்பினர் சயீத் பின் கலஃப் அல் குபைசி ஆகியோர் கையெழுத்திட்டனர். எனவே இந்த சேவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இரு நாடுகளுக்கும் மக்கள் எளிதில் சென்று வர மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.