‘உலக மக்களின் பசியை போக்க ஓடோடி உதவும் அமீரகம்’… துபாய் ஆட்சியாளர் ட்வீட்..!!
துபாயின் துணைத் தலைவரும் பிரதமரும் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அவர்கள் சமீபத்தில் உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு சமூக ஊடகத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஐக்கிய அரபு அமீரகம் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு தொடர்ந்து உதவும் என்றும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்கு பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொண்டுவர அமீ்ரகம் மற்றவர்களுக்கு ஆதரவளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து நாங்கள் எங்கள் சமூகப் பணியை மேலும் விரிவுபடுத்துவோம் எனவும், தொடர்ந்து ஏழைகளுக்காக உதவிக்கரம் நீட்டுவோம் எனவும் ஷேக் முகமது கூறியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில், துபாயின் ஆட்சியாளர் அவர்கள் மனிதாபிமானத்தின் அடிப்படையில் 100 நாடுகளில் வசிக்கும், 102 மில்லியன் மக்கள் பயனடையும் வகையில் 1.4 பில்லியன் திர்ஹம்களை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் உலகில் வாழும் பின்தங்கிய நாட்டு மக்களுக்கு இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் பிரச்சாரம் உள்ளிட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் இது குறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ கிளிப்பில் மனிதாபிமானத்தின் அடிப்படையில், உலகிற்கு பல நன்மைகள் செய்த ஐக்கிய அரபு அமீரகத்தின் செயல்கள் இடம் பெற்றிருந்தன. அதில் பசியில் வாடும் மக்களுக்கு உணவளிப்பது அமீரகத்தின் முதல் நோக்கம் எனவும், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைத்து மக்கள் ஆரோக்கியமுடன் வளர எல்லா விதமான முயற்சிகளையும் செய்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
في اليوم العالمي للعمل الإنساني نؤكد رسالة الإمارات ورسالتنا : مستمرون في ترسيخ قيم العطاء في مجتمعنا .. مستمرون في مد يد العون للشعوب الأقل حظاً .. مستمرون في محاربة الفقر والجوع والجهل في كل مكان في منطقتنا والعالم .. ومستمرون بغرس الأمل بغد أفضل في مجتمعاتنا العربية .. pic.twitter.com/KKgtETnRiS
— HH Sheikh Mohammed (@HHShkMohd) August 19, 2023