துபாய்: குறைவான விலையில் PCR சோதனை மேற்கொள்ள புதிய மையம் திறப்பு..!! விசிட் விசா உள்ளவர்களும் செல்லலாம்..!! 24×7 என முழுநேரமும் இயங்கும் என தகவல்..!!
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய உதவும் PCR சோதனைக்காக அமீரகம் முழுவதும் நூற்றுக்கணக்கான சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் தற்பொழுது, துபாயின் குசைஸ் பகுதியில் சனிக்கிழமை ஒரு புதிய டிரைவ்-த்ரு கொரோனா சோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அல் நஹ்தா மையத்தில் (al nahda center) அமைந்துள்ள இந்த மையம் 110 திர்ஹமிற்கு RT-PCR சோதனை சேவைகளை வழங்குகிறது. வழக்கமாக மற்ற டிரைவ்-த்ரூ மையங்களில் வசூலிக்கப்படும் 135 மற்றும் 150 திர்ஹம் கட்டணத்தை விட இங்கு சற்று குறைவாகும்.
புதிதாக திறக்கப்பட்டிருக்கும் இந்த சோதனை மையமானது வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அல் நஹ்தா வர்த்தக மையத்தின் பொது மேலாளர் ஷமிம் யூசுப் தெரிவித்துள்ளார்.
அவர் இது பற்றி கூறுகையில், “சோதனைக்கான மாதிரி சேகரிப்புக்குப் பிறகு 12-14 மணி நேரத்திற்குள் சோதனை முடிவுகள் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
துபாய் சுகாதார ஆணையத்தால் (DHA) அங்கீகரிக்கப்பட்ட இந்த மையம், அமீரகத்தில் கொரோனா சோதனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் தலைவர் சம்சுதீன் பின் மொஹிதீன் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
சோதனை மையத்தில் மொத்தம் நான்கு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில், நான்கு கார்கள் RT-PCR சோதனைக்கு செல்ல முடியும். அதேபோல், ஒரு நாளில் எத்தனை மாதிரிகள் சேகரிக்க முடியும் என்பதற்கு வரம்பு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பயண மற்றும் பிற நோக்கங்களுக்காக PCR சோதனைகளை செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், DHA-வில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நான்கு செவிலியர்கள் மாதிரிகளை சேகரிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனை முடிவு அறிக்கையானது வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முடிவு அறிக்கைகள் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனிலும் புதுப்பிக்கப்படும். இது ஒரு QR குறியீட்டைக் கொண்டிருக்கும். இதனை வாடிக்கையாளர்கள் பயண நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல், விசிட் விசா வைத்திருப்பவர்களும் இந்த மையத்தில் சோதனைகளை மேற்கொள்ளலாம்.
குசைஸின் அல் நஹ்தா மையம் துபாய் பொருளாதாரத் துறை, துபாய் சுகாதார ஆணையம், துபாய் சிவில் பாதுகாப்பு, துபாய் பொது நோட்டரி, துபாய் நீதிமன்றங்கள் மற்றும் இமிக்ரேஷன் கவுன்டருடன் பல்வேறு அரசு சேவைகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.