சவூதி அரேபியா: பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு இலட்சம் ரியால் அபராதம்.. ஒரு வருட சிறை தண்டனை..!!
சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பவர்களுக்கு சவூதி அரசு புதிய கடுமையான விதிமுறைகளை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, பிச்சை எடுப்பவர்களுக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 100,000 ரியால் அபராதம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பிச்சை எதிர்ப்புச் சட்டத்தின்படி, பிச்சை எடுப்பதில், பிச்சைக்காரர்களை நிர்வகிப்பதில் அல்லது பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்யும் எந்தவொரு நபர் மீதும் நடவடிக்கை விதிக்கப்படும்.
பிச்சை எடுப்பதில் ஊக்குவிக்கும் மற்றும் உதவி செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறை அல்லது 50,000 ரியாலுக்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சட்டப்படி, சவுதி அல்லாத பிச்சைக்காரர்கள் சிறை தண்டனை பெற்று மற்றும் அபராதம் செலுத்திய பிறகு நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வேலைக்காக சவூதிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிநாட்டவர்களில் சவுதி பெண்களின் கணவர்கள் அல்லது குழந்தைகளாக இருக்கும் பிச்சைக்காரர்கள் நாடு கடத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
அதே போல் சட்டப்படி, பிச்சை எடுக்கும் ஒரு நபர் குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டால் இவ்வாறு கடுமையாக தண்டிக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டம் உள்துறை அமைச்சகத்தை இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையமாக வரையறுக்கிறது. சட்டத்தின் பிரிவு நான்கில், உள்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, சவுதி பிச்சைக்காரர்களின் சமூக, சுகாதாரம், உளவியல் மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
2018 ஆம் ஆண்டில், மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, மொத்தம் 2,710 சவுதி பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பிச்சைக்காரர்களில் சுமார் 79 சதவீதம் பேர் பெண்களாகவும் (2,140 பேர்), 21 சதவிகிதம் பேர் ஆண்களாகவும் (570 பேர்) இருந்தது குறிப்பிடத்தக்கது.