துபாய்: கொரோனா தொற்று பாதித்த பயனிகளை அனுமதித்ததற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு தடை..!!
துபாய் மற்றும் இந்தியாவிற்கு இடையே இயக்கப்படும் இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று நள்ளிரவு (செப்டம்பர் 18) முதல் அக்டோபர் 3 வரை என 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கான பரிசோதனையில் நேர்மறை முடிவைப் பெற்ற இரு பயணிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு இரு வெவ்வேறு விமானங்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இரு வாரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் துபாய் விமான நிலையத்தை வந்தடைய துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நிறுத்தி வைத்துள்ளதாக தற்பொழுது தெரியவந்துள்ளது.
இந்த தடை குறித்து துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டிருந்த நோட்டீஸில் “கொரோனாவிற்கான நேர்மறை சோதனை முடிவுகளை வைத்திருக்கும் பயணிகளை இரண்டாவது முறையாக ஏற்றிச் செல்வது, தற்போதைய கொரோனா காலத்தில் துபாயில் இருந்து மற்றும் துபாய்க்கு பயணம் செய்வது தொடர்பான வகுக்கப்பட்ட நடைமுறைகள் அல்லது நெறிமுறைகளை மீறுவதாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவிற்கான நேர்மறை சோதனை முடிவை பெற்ற பயணிகள் முறையே செப்டம்பர் 2 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் துபாய் வந்தடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் மருத்துவ செலவுகள் மற்றும் பிற பயணிகளின் தனிமைப்படுத்தல் தொடர்புடைய எந்தவொரு செலவினத்திற்கும் ஏர் இந்தியாவை செலுத்துமாறு DCAA கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், “துபாய் விமான நிலையங்களுக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளை தொடங்குவதற்கு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, அதிகார மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்காக விரிவான மறுஆய்வு நடவடிக்கை / நடைமுறைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருப்பி அனுப்பும் விமானங்களை மே மாதம் முதல் இயக்கி வருகிறது. மேலும், அமீரகம் மற்றும் இந்தியாவிற்கு இடையே போடப்பட்ட ஏர் பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவில் இருந்தும் அமீரகத்திற்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. இவ்வாறு இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் சான்றிதழை ICMR அல்லது PUREHEALTH ஆய்வகத்தில் இருந்து கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின், பத்திரிகை, தகவல் மற்றும் கலாச்சாரத்தின் தூதர் நீரஜ் அகர்வால் கூறுகையில், வந்தே பாரத் திட்டம் தொடங்கியதில் இருந்து மொத்தம் 368,000 இந்தியர்கள் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் சுமார் 6,000-6,500 பயணிகள் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வார இறுதியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பல பயணிகளும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தியை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.