துபாயில் சட்ட விரோதமாக காவல்துறையின் எமர்ஜென்சி விளக்குகளைப் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் பறிமுதல்..!
துபாய் வாகன ஓட்டிகள் காவல்துறையின் எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. துபாய் சாலையில் இரண்டு வாகனங்கள், அவசர காலத்தில் வழி வழங்குவதற்கான காவல்துறையின் பிரத்யேக விலக்குகளை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுப் போக்குவரத்துத் துறையின் செயல் இயக்குநர் கர்னல் ஜுமா பின் சுவைடன், சாலைப் பயனாளிகள் சட்டப் பொறுப்புகளை எதிர்கொள்வதைத் தவிர்க்கவும், தங்கள் உயிருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கவும் போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கர்னல் பின் சுவைடான் மேலும் கூறுகையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் துறையினர், சட்ட விரோதமாக அவசர எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்திய இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்ததாக கூறினார்.
“சட்ட விரோதமாக செயல்பட்ட ஒரு வாகனத்தௌ எமிரேட்ஸ் சாலையிலும், மற்றொன்றை ஷேக் முகமது பின் சயீத் சாலையிலும் கண்டறிந்தோம். இரு வாகன ஓட்டிகளுக்கும் எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.