அபுதாபியின் முக்கிய சாலையில் பேருந்து இயக்கத்திற்கு இனி தடை!! ITC வெளியிட்ட அறிவிப்பு…!!
அபுதாபியில் உள்ள முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்துத் துறையின் (DMT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC), அபுதாபி காவல்துறை GHQ உடன் இணைந்து, ஷேக் சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டில் ஷேக் சையத் பாலத்திலிருந்து ஷேக் சையத் டன்னல் வரை அனைத்து வகையான மற்றும் அளவிலான பேருந்துகளின் போக்குவரத்தை தடை செய்வதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 15, திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் தடையானது 24 மணி நேரமும் இரு திசைகளிலும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடையானது வார இறுதி நாட்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களிலும் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பள்ளிப் பேருந்துகள், பொதுப் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பணியிடங்களை அணுகும் பேருந்துகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் தடை செய்யப்பட்டுள்ள பகுதியைக் காட்டுகிறது:
முக்கிய சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், அபுதாபி காவல்துறையுடன் இணைந்து ஸ்மார்ட் சிஸ்டம்ஸ் மூலம் சாலையை கண்காணித்தல், விதிமீறல் பேருந்துகளைக் கண்காணித்தல் மற்றும் அபராதங்களைச் செயல்படுத்துதல் போன்ற சாலை கண்காணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குமாறு ஆபரேட்டர்கள் மற்றும் ஓட்டுநர்களை ITC அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel