துபாய்: பொது பேருந்துகளுக்கான பிரத்யேக பாதையை மேலும் ஆறு சாலைகளுக்கு நீட்டித்த RTA..!! 60% பயண நேரம் குறையும் எனவும் தகவல்..!!
துபாயின் சில முக்கிய சாலைகளில் பேருந்துகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய பிரத்யேக பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் கிட்டத்தட்ட 60 சதவீதம் குறையும் என்றும், இது எமிரேட்டில் பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கும் என்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
இந்த அர்ப்பணிக்கப்பட்ட பாதைகளை தனியார் வாகன ஓட்டுநர்கள் தற்செயலாக பயன்படுத்தாத வகையில், பாதைகளில் தனித்துவமான சிவப்பு நிறக் கோடுகள் உள்ளன. அதை பொருட்படுத்தாமல் இந்த தடங்களில் வாகனம் ஓட்டினால் 600 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
துபாய் RTA அறிவித்துள்ள இந்த புதிய பிரத்யேக பாதைகளானது ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா, டிசம்பர் 2, அல் சத்வா, அல் நஹ்தா, உமர் பின் அல் கத்தாப் மற்றும் நைஃப் ஆகிய ஆறு முக்கிய தெருக்களில் 13 கிமீ நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திட்டம் 2025 மற்றும் 2027 ம் ஆண்டுகளில் 20 கிமீக்கு மேல் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
துபாயில் தற்போது காலித் பின் அல் வலீத் சாலையில் உள்ள பிரத்யேக சாலை உட்பட 7 கிமீ நீளத்திற்கு பொது பேருந்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட பாதைகள் உள்ளன. இது தவிர, நைஃப், ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா மற்றும் அல் குபைபா தெருக்களிலும் கூடுதல் பாதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
RTA மதிப்பீட்டின்படி, திட்டத்தின் முந்தைய மூன்று கட்டங்களில் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாததால், சில வழித்தடங்களில் பேருந்துகளின் பயண நேரத்தை ஒரு பேருந்திற்கு ஐந்து நிமிடங்கள் குறைத்து, 24 சதவீதம் முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இவ்வாறு பாதைகளை விரிவுபடுத்துவது சில சாலைகளில் பொது போக்குவரத்து பயன்பாட்டை 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து RTAவின் இயக்குநர் ஜெனரலும், இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் டேயர் பேசுகையில், இத்தகைய அர்ப்பணிக்கப்பட்ட பாதைகள் குடியிருப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இந்த பிரத்யேக பேருந்து பாதைகளின் விரிவாக்கம், பீக் ஹவர்ஸில் 24 முதல் 59 சதவீதம் வரை பேருந்து பயண நேரத்தை குறைக்கும் என்றும், பிரத்யேக வழித்தடங்களில் பேருந்து வருகை நேரத்தை 28 முதல் 56 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel