68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாயகத்திற்கு வந்து சேர்ந்த ஏர் இந்தியா..!!
டாடா குழுமத்தால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனமானது 68 ஆண்டுகளுக்குப் பிறகு தாயிடமே வந்து சேர்ந்தது போல் மீண்டும் டாடா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
டாடா நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18,000 கோடிகளுக்கு ஏலம் எடுத்து வாங்கியுள்ளது.
இதனையடுத்து, இது குறித்து டாடா குழுமம், “ஏர் இந்தியா, ஜே.ஆர்.டி. டாடா தலைமையில் ஒரு காலத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க விமான நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்கியது. ஜே.ஆர்.டி. டாடா இன்று நம் மத்தியில் இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.” என ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளது.
1932 ல் டாடா குழுமத்தால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் 1953 ல் தேசியமயமாக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த விமான நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்திடம் வந்து சேர்ந்துள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இணைந்த பிறகு நஷ்டத்தை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கு கடும் முயற்சிகள் தேவைப்படும் எனவும் டாடா குழுமம் விமானத் துறையில் இருப்பதற்கு இது ஒரு வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.