ஜனவரி 3 முதல் அனைத்து எமிரேட்களிலும் கிரீன் பாஸ் கட்டாயம்..!! மத்திய அரசு நிறுவனங்களுக்குள் நுழைய கட்டுப்பாடை விதித்த அரசு..!!
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அனைத்து எமிரேட்களிலும் உள்ள அனைத்து மத்திய அரசு நிறுவனங்களுக்குள் ஊழியர்கள் மற்றும் விசிட்டர்கள் நுழைவதற்கு கிரீன் பாஸ் நடைமுறையை அமல்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுக்கொண்டதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் (WAM) செய்தி வெளியிட்டுள்ளது.
அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP) மற்றும் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) படி, ஜனவரி 3, 2022 முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் மற்றும் விசிட்டர்கள் மற்றும் தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அரசு நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களைப் பெற்றவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் இதில் அடங்குவர் என்றும், இருப்பினும் அல் ஹொஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் அமைப்பின் செயல்திறனை உறுதிசெய்ய ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒருமுறை PCR சோதனையை அவர்கள் செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போன்று தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களும் அல் ஹொஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு அவர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை PCR சோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த ஆய்வக சோதனையும் செய்யத் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
COVID-19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத ஊழியர்கள் மற்றும் விசிட்டர்களுக்கு அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்றும், தடுப்பூசி போடப்பட்டிருந்தும் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இல்லாமல் சாம்பல் (Grey) நிறத்தில் இருந்தால் அவர்களுக்கும் நுழைவு அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் கிரீன் பாஸை தக்கவைத்துக் கொள்ள 14 நாட்களுக்கு ஒரு முறை PCR சோதனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது..
அத்துடன் அமீரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய நெறிமுறைகளின்படி COVID-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.