அமீரக செய்திகள்

அமீரக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபி இளவரசரை வாழ்த்திய துபாய் ஆட்சியாளர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சகோதரரான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் மரணித்த ஒரு நாளுக்குப் பிறகு,  சனிக்கிழமை பிற்பகல் ஃபெடரல் சுப்ரீம் கவுன்சிலால் அவர் அமீரகத்தின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சனிக்கிழமை அமீரகத்தின் அபுதாபி தவிர்த்து மற்ற ஆறு எமிரேட்டுகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து தற்பொழுது அபுதாபியின் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஷேக் முகம்மது அவர்கள் தம்மீது வைக்கப்பட்டுள்ள இந்த விலைமதிப்பற்ற நம்பிக்கைக்கு பாராட்டு  தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில் ஐக்கிய அரபு அமீரகம் இன்று ஒரு புதிய தலைவரின் கீழ் அதன் வரலாற்றில் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்கிறது என்று கூறியுள்ளார். அத்துடன் “நாங்கள் அவரை வாழ்த்துகிறோம், நாங்கள் அவருக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம், மேலும் எங்கள் மக்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என உறுதியளிக்கிறோம்”.

“கடவுள் ஆசிர்வாதத்துடன், முழு நாட்டையும் பெருமை மற்றும் மரியாதையின் பாதையில் கொண்டு செல்ல அவர் வழிநடத்துவார்.” என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவுகளைத் தொடர்ந்து அபுதாபியின் மகுட இளவரசராக பதவி வகித்த மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அவர்கள் இனி அபுதாபியின் 17வது ஆட்சியாளராகவும் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அமீரகத்தில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, குவைத், கத்தார், பஹ்ரைன், சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!