துபாயில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை பொருட்கள் பாதுகாப்பானதா..?? தெரிந்து கொள்வது எப்படி..??
துபாய் முழுவதும் சோப்புகள், அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்ற பல்வேறு நுகர்வு பொருட்களை விற்பனை செய்யும் 8,000 க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள் உள்ளன. இவற்றில் பொருட்களை மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யும் தள்ளுபடி கடைகளும் உள்ளன. இந்த கடைகள் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை 10 திர்ஹம்ஸிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்கின்றன.
இவ்வாறான கடைகள் பெரும்பாலும் Dh1 முதல் Dh10 என்ற பெயரில் பரிசுபொருட்கள், உடைகள் மற்றும் பிற நுகர்வு பொருட்களை விற்பனை செய்து வருகின்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்கள் விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் பொதுமக்கள் பயன்படுத்த பாதுகாப்பானவையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை துபாய் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த துபாய் நகராட்சியின் சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை இயக்குநர் டாக்டர் நசீம் முகமது ரஃபி அவர்கள், ஷாப்பிங் செய்யும் குடியிருப்பாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள மொன்டாஜி (Montaji) என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அந்த அப்ளிகேஷனில் 250,000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் தயாரிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை அறிய உதவுகிறது, மேலும் குடியிருப்பாளர்கள் அரசால் பதிவுசெய்யப்பட்ட மற்றும் அசல் பொருட்களை வாங்குவதை இந்த அப்ளிகேஷன் உறுதிசெய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், டிடெர்ஜென்ட், கிருமிநாசினிகள், சுகாதார சப்ளிமெண்ட்ஸ் போன்ற எந்தவொரு நுகர்வோர் தயாரிப்புகளையும், நுகர்வோர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பார்கோடு அல்லது நிறுவனத்தின் பெயரால் மொன்டாஜி என்ற அப்ளிகேஷனில் தேடுவதன் மூலம் அந்த தயாரிப்பு துபாய் நகராட்சியில் பதிவு செய்யப்பட்ட உண்மையான தயாரிப்பு என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேலும் நுகர்வோர் வாங்கும் ஏதேனும் தயாரிப்பு நகராட்சியில் பதிவு செய்யப்படாதது என வாடிக்கையாளர்கள் கண்டால், அவர்கள் அந்த அப்ளிகேஷன் மூலம் நகராட்சிக்கு தெரியப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.